காலம், அல்லாஹுத் தஆலாவினது அத்தாட்சியாகும். காலங்கள் சுழன்று வருவதில் அல்லாஹ் பல்வேறு சிறப்புக்களை வைத்திருக்கிறான். நாட்களுக்கிடையில், மாதங்களுக்கிடையில் ஒவ்வொன்றுக்கும் என அல்லாஹ் விசேட அம்சங்களைக் கொடுத்திருக்கிறான். அவற்றில் சில அல்லாஹ்வை நெருங்குவதற்கான பருவகாலங்களாகும். இன்னும் சிலவற்றில் மனிதர்கள் தாமாகவே உருவாக்கிய அல்லாஹ் காட்டித் தராதவற்றால் படைத்தவனை நெருங்கப் பார்க்கின்றனர். இவற்றை நாம் பித்அத் என்கிறோம்.
தற்போது ரஜப் மாதம் நம்மை அடைந்திருக்கின்றது. அப்படியாயின் நன்மைகளின் பருவகாலமாகிய ரமழான் நம்மை அடைவதற்கு ஐம்பத்து சொச்சம் நாட்களே உள்ளன எனும் எண்ணம் நம் மனத்தில் உதித்து உள்ளம் பேருவகை பூண்டுவிடும்.
ரஜப் என்ற அறபுமொழிச் சொல்லுக்கு மகத்துவப்படுத்தல் என்ற கருத்திருப்பதை அகராதிகளைப் புரட்டும் போது தெரிந்துகொள்ள முடிகிறது. ரஜப் என்ற சொல் நாம் இருக்கும் இம்மாதத்துக்கு சூட்டப்பட்டதில் அன்றைய நபிகளார் (ஸல்) அவர்களது காலத்தின் முழர் கோத்திரத்தாருடன் தொடர்பான நிகழ்வுகள் சம்பந்தப்படுகின்றன. ஒருவருக்கொருவர் கண்ணியப்படுத்தவும் மகத்துவம் செய்யவும் இந்நாட்களை அவர்கள் ஒதுக்கி வைத்திருந்தனர். ரஜப் மாதம் அரபிகள் தமக்கிடையில் யுத்தம் செய்வதைத் தடைசெய்து புனிதப்படுத்தியிருந்த நான்கு மாதங்களில் ஒன்று என்பது முக்கியமானது.
ரஜப் அடைந்துவிடும் போது இன்றைய சமூகவலைத்தள யுகத்தில் வாட்சப், பேஸ்புக் எங்கும் பல செய்திகள் பரப்பப்படும். “ரமழான் வரும் செய்தியை யார் இன்னொருவருக்கு முதலில் அறிவிப்பாரோ, அவரை நரகம் தீண்டாது” என்ற செய்தி இவற்றில் பிரபலமானது. ஆனால் இது நபியவர்களது பேரில் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும். நபியவர்களது பெயரில் இட்டுக்கட்டுவது நபிகளார் (ஸல்) நரகத்தை நோக்கி இட்டுச் செல்லுமென எச்சரித்ததாகும்.
நம்மில் சிலர் ரஜப் மாதமடைந்ததும் உம்ரா பயணத்துக்கான முஸ்தீபுகளில் ஈடுபடுகிறார்கள். உம்ரா பயணத்துக்கான நிறுவனங்களும் அதிகம் உம்ராவை விளம்பரம் செய்யும் காலமாகவும் இது உள்ளது. எனினும் இதுவும் ஆதாரப்பூர்வமற்றதாகும். “ரமழானிலே உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு இணையானது” என்பது போல ரஜப் மாதத்திலே உம்ரா செய்வதற்கென எவ்வித ஹதீஸும் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதில்லை.
இவ்வாறுதான் ரஜப் மாதத்திலே எந்த விதமான விசேட தொழுகைகளும் இல்லை. இதுதொடர்பில் சமுதாயங்களிடத்தே பரவிப் போயிருக்கும் சில நம்பிக்கைகளுக்கும் தூதர் (ஸல்) அவர்களது பேரில் இட்டுக்கட்டப்பட்டவற்றுக்குமுரிய பதில்களை நமது ஆரம்பகால இமாம்கள் அளித்துவிட்டார்கள். இமாம் இப்னு ஹஜர் , இமாம் நவவி, இமாம் இப்னு தைமியா ஆகியோர் இதற்கான விளக்கங்களை அவர்களது கிரந்தங்களில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தொழுகையை விடுத்து ரஜப் மாதம் விஷேட நோன்புகள் நோற்பதற்கான அல்லது ஸகாத் கணக்கிட்டுக் கொடுப்பதற்கான விஷேட பருவமோ அல்ல.
ஷரீஅத் வகுத்துத்தராத எந்தவொரு இபாதத்துக்கும் நாம் நேரம் வகுத்துக்கொள்ள முடியாது. இபாதத்துக்கள் விடயத்திலோ அல்லது ஏனைய நற்காரியங்கள் விடயத்திலோ ஷரீஅத் நேரம் குறித்து சிறப்பாக்கித் தந்தாலேயொழிய ஒரு நேரத்திற்கும் இன்னொரு நேரத்திற்குமிடையில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது.
எனவே ரஜப் மாதத்தில் உம்ரா மேற்கொள்வது ஏனைய மாதங்களில் உம்ரா நிறைவேற்றுவது போன்ற கடமைதான். ஆகவே இதே நோக்கில், வருடத்தின் எல்லா நாட்களிலும் உம்ரா செய்வது போன்று கருதி வேறேதும்சிறப்புக்கள் கொடுக்காது உம்ராவை மேற்கொள்வது பிரச்சினைக்குரியதாகாது. அவ்வாறுதான் தொழுகைகளும் ஏனைய நாட்கள் போல உபரியானவற்றைத் தொழுவது நன்மைக்குரியதுதான். ஆனால் அவற்றுக்கென விஷேட சிறப்புக்கள் கிடையாது. வழமையான திங்கள், வியாழன் மற்றும் அய்யாமுல் பீழ் மூன்று நாட்களும் என நோன்புகளும் நோற்றுக்கொள்ள முடியும்; வருடம் பூர்த்தியான செல்வங்களுக்கு ஸகாத்தையும் கணக்கிட்டுக் கொடுக்கலாம்; ஸதகாக்களும் கொடுக்க முடியும். ஆனால் ரஜப் மாதம் என்ற காரணத்தால் இவற்றுக்கென விஷேட சிறப்பு ஏதுமில்லை என்பதை நாம் மனங்கொள்ளவேண்டும்.
பலவீனமான அறிவிப்புக்களுக்கும் பல கருத்து முரண்களுக்கும் இடையில் ரஜப் மாதத்தில் தான் இஸ்ரா-மிஃராஜ் பயணம் நிகழ்ந்தது என்பது பொதுமக்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. இந்நாட்களை விசேடமான கொண்டாட்டமாகக் கழிப்பதில் பொதுமக்கள் ஈடுபடுவர். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் ரஜபைக் கொண்டாடுவது குறித்து வினவப்பட்ட போது “அது வெறுப்புக்குரியது” என சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அத்தோடு பலஸ்தீன நிலத்தை மையப்படுத்தி நிகழும் சியோனிஸ பயங்கரவாதத்தின் வெறியாட்டங்களினது மையப்புள்ளி “இஸ்ரா” பயணத்தில் தான் உள்ளது என்பதை நாம் இந்தத் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க மறக்கக் கூடாது. மிஃராஜ் இடம்பெற்ற காலம் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் மிஃராஜை நினைவுபடுத்துவதைப் போலவே இஸ்ராவை நினைவூட்டி இந்த உம்மத்தை விழிப்பூட்டுவது அத்தியாவசியம் என்பதை சமகால அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரஜப் மாதம் போர் செய்வது தடுக்கப்பட்டு அரபிகள் கண்ணியப்படுத்திய மாதம் என்பதை முன்னர் நினைவூட்டியிருந்தோம். ஜாஹிலிய்ய காலத்தில் இருந்த இந்த நல்ல அம்சத்தை இஸ்லாம் அங்கீகரித்தது. இஸ்லாத்தின் வருகையின் பின்பும் தொடர்ந்தும் அந்த வழக்கம் நிலைபெற்றது.
வல்ல அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்” (அத்தவ்பா: 36)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
“ஒரு வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு புனிதமானவை. மூன்று தொடர்ந்து வருவன, அவை: துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் ஆகும். நான்காவது மாதம் ஜுமாதுல் ஆகிராவுக்கும் ஷஃபானுக்கும் இடைப்பட்ட ரஜப் ஆகும்.” (புகாரி, முஸ்லிம்)
நம்மைப் பொருத்தவரைக்கும் அல்லாஹ்வை நெருங்கும் வணக்கங்களுக்கான விஷேட காலமாக ரஜப் மாதம் ஆக்கித்தரப்படவில்லை என்பதை அறிந்து கொண்டோம். ஆனால் ஏனைய நாட்களில், மாதங்களில் போல ரஜப் மாதத்தில் இபாதத்களில் ஈடுபடுவதில் தவறில்லை.
ரமழான் நெருங்கியிருக்கிறது. எனவே நம்மை ரமழானுக்கென தயார்படுத்த முடியும். ரமழான் நன்மைகளது பருவகாலம். ரமழான் உபரியான தொழுகைகளுக்கும் ஃபர்ழுக்குரிய நன்மைகளை பெற்றுத் தரும். ரமழான் அதிகமதிகம் குர்ஆன் ஓதப்பட வேண்டிய மாதம். எனவே அதற்குரிய பயிற்சியை இப்போதே ஆரம்பிக்கலாம். குர்ஆனை அதிகமதிகம் ஓதிக்கொள்ளவும் உபரியான தொழுகைகளை தொழுவதும் ரமழானை வினைத்திறனாக்கக் கூடிய பயிற்சியாக அமையும்.
அறிவிப்புப் பலவீனமான ஒரு நபிமொழி வந்திருக்கிறது. எனினும் அதன் கருத்து அழகியது. நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தை அடைந்துவிட்டால் கீழ்வரும் பிரார்த்தனையைப் புரிபவர்களாக இருந்தார்கள் என அந்த செய்தி தெரிவிக்கின்றது. “அல்லாஹும்ம பாரிக் லனா ஃபி ரஜப வ ஷஃபான் வ பல்லிஃங்னா ரமழான்” (கருத்து: இறைவா! ரஜபிலும் ஷஃபானில் நமக்கு அருள் சொரிவாயாக! மேலும் ரமழானை அடையச் செய்வாயாக!)
இந்த செய்தி ஒரு பலவீனமான அறிவிப்புத்தான். எனினும் இக்கருத்திலே துஆ கேட்பது சரியானதே. தூதர் (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் உட்பட மற்றுமுண்டான முன்சென்ற சான்றோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களது வாழ்வியல் ஒழுங்குகளை நோக்கினால் ரமழானுக்கென எந்தளவு தயாராகியுள்ளனர் என்பது புரியும். நபியவர்களது சீறாவை இன்றே புரட்டிப் பாருங்கள். ரமழானுக்கென தம்மை சிறப்பாக முன்னமேயே தயார்படுத்திக் கொண்டிருப்பதை நாம் காண முடியும். சில ஸலப்களின் வாழ்வில் ஆறு மாதங்கள் ரமழானுக்குத் தயாராவதற்காய் எடுத்துக்கொண்டதாக வாசிக்கிறோம். எனவே நாமும் இப்போதே, வரப்போகும் ஆன்மீகப் பருவகாலத்துக்கு நம்மைத் தயார்செய்ய ஆயத்தமாவதே மதிநுட்பமானது.