தென்னாபிரிக்காவில் முஸ்லிம்கள்

maxresdefault

தென்னாபிரிக்கக் குடியரசு

 

தலை நகரங்கள்: Pretoria (executive), Bloemfontein (judicial), Cape Town (legislative)

பெரிய நகரம்: Johannesburg

சனத்தொகை: 54,002,000[4] (25th) – 2014 கணக்கெடுப்பு

நாட்டின் பரப்பளவு: 1,221,037 km2 (25th)

இன க்குழுமங்கள்: 79.2% Black African, 8.9% Coloured, 8.9% White, 2.5% Indian or Asian

மொழிகள்: 11 மொழிகள்

சமய நம்பிக்கைகள்: Christians 79.8%, Muslims 1.5% , Hindus 1.2%, Traditional African religion 0.3%, Judaism 0.2%, சமய நம்பிக்கையற்றோர் 15.1%

நாணயம்: South African Rand (ZAR)

பொருளாதாரம்: சுற்றுலா, விவசாயம், கனிய வளம்

ஆட்சி முறைமை: Unitary Constitutional Parliamentary Republic

பாராளுமன்றம்: Upper House: National Council of Provinces / Lower House: National Assembly

அரசுத் தலைவர் ஜனாதிபதி: Jacob Zuma

 

மௌலானா இல்யாஸ்(ரஹ்) அவர்கள் குறிப்பிடுவதாக தப்லீக் ஜமாஅத் சகோதர்ர்கள் அடிக்கடி மேற்கோள்காட்டும் விடயமொன்று என்னை அதிகம் ஈர்ப்பதுண்டு. அதாவது தஃவா தழைத்தோங்கி வளரக் கூடிய இரண்டு தேசங்களாக அன்னவர்கள் தென்னாபிரிக்காவையும் இலங்கையையும் அடையாளப்படுத்துவார்களாம். அன்னவர்கள் குறிப்பிட்டது தப்லீக் தஃவாவைத்தான் என்பது வெளிப்படை… சொன்னது போலவே இரண்டு தேசங்களிலும் தப்லீக் ஜமாஅத்தின் தஃவா பாரியளவில் வீச்சுக் கண்டுள்ளது. ஆனால் அந்த மேற்கத்தேய, ஆங்கிலம் பேசும் சூழல் கொண்ட அத்தேசத்தில் கண்ட வளர்ச்சி இங்கிலும் பார்க்க முற்றிலும் வித்தியாசமானது.

தலைப்பை விட்டு வெளியே போகாமல் மீளவும் தென்னாபிரிக்காவுக்கு வருவோம். தென்னாபிரிக்கா அழகான நாடு… பெயரைப் போலவே ஆபிரிக்காவின் தென் கரையோரத்திலே நன்னம்பிக்கை முனையில் நம்பிக்கை தரும் தேசமாக இருக்கிறது.

தென்னாபிரிக்காவிலே சில வித்தியாசமான அம்சங்களாக அடையாளம் செய்யக் கூடிய அம்சங்கள் உள… பொது அறிவுப் போட்டிகளில் தென்னாபிரிக்காவின் தலைநகர் எதுவெனக் கேட்டால் பட்டெனப் பதிலளித்திட முடியாது. காரணம் மூன்று தலைநகர்களைப் பெற்ற பாக்கிய நாடு அது. அதுபற்றி நிலைத் தகவலில் தெளிவாய்ச் சொல்லி உள்ளேன்.

அடுத்து தென்னாபிரிக்காவைச் சூழவுள்ள எல்லைகளாக மேற்கு, தெற்கு, கிழக்கு பகுதிகளில் அத்திலாந்திக் பெருங்கடலும் இந்து மா கடலும் வடக்கில் பொட்ஸுவானா, ஸிம்பாப்வே, மொஸாம்பிக்கும் உள்ளன. உலக நாடுகளுக்கு மாற்றாய் தென் ஆபிரிக்க தேசத்தின் உட்பகுதியில் லெசோத்தோவும் சுவாஸிலாந்தும் உள்ளன. அதாவது இந்நாடுகளின் முழு எல்லையுமே தென்னாபிரிக்கா தான். இந்நாடுகளைச் சூழ தென்னாபிரிக்காவே அமைந்திருக்கின்றது.

தென்னாபிரிக்காவில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஆனால் அறிமுகம் தேவையற்ற அடுத்த அதிசயமாக நான் கிரிக்கெட் வீரர் ஹாஷிம் அம்லாவைத் தான் சொல்வேன்…

 

தென்னாபிரிக்காவுக்கு இஸ்லாம் எப்படிச் சென்றது?

வரலாற்றுத் தகவல்கள் படி மூன்று வழிகளில் தென்னாபிரிக்காவுக்குள் இஸ்லாம் காலடியெடுத்து வைத்திருக்கிறது. முதலில் அடிமைகள் வியாபார வழியாகவும் அரசியல் கைதிகள் நாடுகடத்தல்கள் வழியாகவும் (இவர்களில் இந்தோனேசியாவின் அரசியல் கைதிகளே பிரதானமானவர்கள்) குடிப்பெயர்வுகள் நிகழ்ந்தன. இவை கி.வ. 1652-1800 காலங்களின் நிகழ்வுகளாகும். பின் 1800 கள் தாண்டி இந்தியத் தொழிலாளர்கள் வந்தனர். அவர்களில் 7-10% முச்லிம்களாக இருந்தனர். இது இரண்டாம் கட்டமாகும்.

மூன்றாவதாக இன்றைய பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவின் குஜராத் பகுதிகளிலிருந்து வியாபார நோக்கில் வந்தவர்களும் இருக்கின்றனர். இவர்களின் இன்றைய எண்ணிக்கை 75,000-100,000 இருக்கலாமென மதிப்பிடப்படுகிறது. இவர்கள் முழு தென்னாபிரிக்காவிலும் மதிப்பும் செல்வாக்கும் கொண்டவர்களாக்க் கருதப்படுகின்றனர். ஹாஷிம் அம்லாவும் குஜராத் பின்னணி கொண்டவர்தான். அங்குள்ள முஸ்லிம்களில் அனைவரும் ஸுன்னிக்களே… எனினும் அஹ்மதிக்களின் தீவிர பிரசாரத்துக்குப் பலியாகி மதம் மாறிய சிறு தொகைக் கூட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கேப் டவுன் நகரை மையப்படுத்தி நிகழும் மதமாற்றமாகும்.

இவர்களில் குறிப்பாக இந்தோனேசியாவின் அரசியல் கைதிகளைப் பொறுத்தமட்டில் அன்றைய டச்சு அரசுக்கெதிராக ஜிஹாத் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசியல் செயற்பாட்டாளர்களாவர்.

இதற்குமப்பால் நான்காவது வழியொன்றூடாகவும் இஸ்லாம் அங்கு பிரசன்னமாகிக் கொண்டிருக்கிறதென்று துணிந்து கூற முடியும். அங்கு பல கிறிஸ்தவ சமயத்தவர்கள் தொடர்ந்தும் இஸ்லாமைக் கற்று இஸ்லாமைத் தழுவுவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். ஆனால் மற்ற நாடுகளை விடவும் காரணம் தான் வித்தியாசமானது. தென்னாபிரிக்காதான் உலகிலேயே அதிகம் எயிட்ஸ் நோயாளர்கள் கொண்ட நாடு. எனவே அவர்களுக்குக் கிறிஸ்தவம் தராத பாலியல் கட்டுப்பாட்டையும் மதுவிலக்கையும் இஸ்லாமிலே கண்டு இஸ்லாமை இறுகப்பற்றிக் கொள்கின்றனர். இவர்களுள் அநேகர் பெண்களும் இளைஞர்களுமே… தென்னாபிரிக்காவிலும் வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம்தான் உள்ளது.

 

அரசியல்

தென் ஆபிரிக்காவில் முதல் ஜனநாயகபூர்வமான தேர்தல் நடைபெற்ற போதிலிருந்தே ஆபிரிக்க முஸ்லிம் கட்சி, இஸ்லாமியக் கட்சி ஆகியன செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நினைவுபடுத்த முடியாத வளர்ச்சி குன்றிய நிலையிலேயே உள்ளன. ஆனாலும் இதுவரைக்கும் தென் ஆபிரிக்க முஸ்லிம்களின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதைக் காணலாம்.

அரசியல் முக்கிய புள்ளிகளுள் , Ebrahim Rasool, Imam Hassan Solomon ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவை தவிர இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

பொதுவிலே பிரச்சினைகள் குறைவான போதிலும் தொகையில் சிறுபான்மையான அங்குள்ள முஸ்லிம்கள் இன்னும் ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் மயப்படவில்லை என்பது பெரும் குறையாகும்.

 

சமூக நிறுவனங்கள்

பல சமூக நிறுவனங்கள் தென் ஆபிரிக்க முஸ்லிம்களைப் பிரதிநித்துவப்படுத்தி வேலை செய்கின்றன. அவற்றுள் Muslim Judicial Council குறிப்பிட்த்தக்கது. இதுவே தென்னாபிரிக்காவின் ஹலால் உற்பத்திகளையும் மேற்பார்வை செய்கின்றது. தென்னாபிரிக்கா உலகின் முன்னணி ஹலால் உற்பத்தியாளர் என்பது கூடுதல் தகவல்.

iiFRi [Islamic Interfaith Research Institute] என்பது மற்றுமொரு குறிப்பிடத்தக்க அமைப்பாகும். இது இனங்களுக்கு, மதங்களுக்கிடையில் உறவுப்பாலத்தைக் கட்டியெழுப்புவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதோடு இஸ்லாம் குறித்த அறிமுகம் செய்வதையும் தன் தலையாய பணியாகச் செய்துவருகின்றது.

OODISA [Organizing and Orchestrating Da’wah in Southern Africa] என்ற நிறுவனம் தென் ஆபிரிக்கா மற்றும் சூழவுள்ள நாடுகளின் இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் பணிகளை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்துவருகின்றது.

கல்வி

பெருமளவு முஸ்லிம்கள் அரச கல்விக்கூடங்களையே நம்பியிருக்கின்றனர். சிறிய தொகையினர் வசதி வாய்ப்புக்காகக் கிறிஸ்தவ தனியார்க் கல்விக் கூடங்களை நாடுவோரும் உண்டு.

இலங்கை மத்ரஸா அமைப்பிலான இஸ்லாமியக் கல்வியை வழங்கக் கூடிய பாடசாலைகளும் உள்ளன. இவை பெரும்பாலும் தேவ்பந்த் பாரம்பரியத்தைத் தழுவியதாகும். இவற்றுள் சில அரச அங்கீகாரம் பெற்ற கலைத்திட்டத்துடன் கலைமானிப் பட்டப்படிப்பை வழங்கும் நிறுவன்ங்களாகவும் உள்ளன. அவற்றுள் குறிப்பிட்த்தக்க நிறுவனங்களாக Dar al-Ulum Zakariyyah, Dar al-Ulum Azaadville, Dar al-Ulum Pretoria. Dar al-Ulum Cape Town CTIEC. Dar al-Ulum Benoni, Dar al-Ulum Newcastle, Dar al-Ulum Springs, Dar al-Ulum Isipingo, Dar al-Ulum Camperdown, Dar al-Ulum Strand என்பவற்றைக் கூறலாம். இவற்றில் உலகின் பல்வேறு பாகங்களிலுமிருந்து சுமார் 40 நாடுகளின் மாணாவர்கள் கற்பதாகவும் கூறப்படுகிறது.

தற்கால இஸ்லாமிய உலக இளைஞர்களிடையே பிரபலமாக உள்ள மொடெல்களில் கிரிக்கெட் வீரர் ஹாஷிம் அம்லா மற்றும் பாடகர்களான ஸைன் பிகா, ராஷித் பிகா சகோதரர்கள் தென்னாபிரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாள முஸ்லிம்கள்…

3463b56bf3044d42b42345dc1193a4cf_18

நேபாள சமஷ்டி ஜனநாயகக் குடியரசு

தலைநகரம்: காத்மண்டு

சனத்தொகை: 26,494,504 (சது.கி.மீட்டருக்கு 180 பேர்)

இனக்குழுமங்கள்: Chhettri 15.5%, Brahman-Hill 12.5%, Magar 7%, Tharu 6.6%, Tamang 5.5%, Newar 5.4%, Muslim 4.2%, Kami 3.9%, Yadav 3.9%

மொழிகள்: Nepali 47.8%, Maithali 12.1%, Bhojpuri 7.4%, Tharu (Dagaura/Rana) 5.8%, Tamang 5.1%, Newar 3.6%, Magar 3.3%, Awadhi 2.4%

சமய நம்பிக்கைகள்: இந்து 81.3%, பௌத்தம் 9%, இஸ்லாம் 4.2%, கிறிஸ்தவம் 1.4%, பாரம்பரிய மத நம்பிக்கைகள் 3.5%

நாணயம்: நேபாள ரூபா (NPR)

பொருளாதாரம்: Agricultural produce including jute, sugarcane, tobacco, and grain

நாட்டின் பரப்பளவு: 147,181 சது.கி.மீ

ஆட்சி முறைமை: சமஷ்டி பாராளுமன்றக் குடியரசு

பாராளுமன்றம்: Constituent Assembly

அரசுத் தலைவர் ஜனாதிபதி: ராம் பாரன் யாதவ்

பிரதமர்: சுஷி கொய்ராலா

 

‘ஸாயு துங்க புல்க ஹாமி…’ எனத் துவங்கும் நேபாள நாட்டுத் தேசிய கீத வரிகளும் அதன் மனம் ஈர்க்கும் இசைகளும் அந்நாட்டின் அழகைப் போலவே அதீதமான ரசனைகள் தரக் கூடியவை. நாம் இலங்கையர் வருடத்துக்கு ஒரு முறையாவது அழகு தேடி மலைநாட்டுக்குப் போவது வழக்கம். ஆனால் நாடு முழுவதுமே மலைகளால் வார்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் அழகை என்னவென்பது…! எவ்வார்த்தைகளால் வர்ணிப்பது…??? போதாமைக்குப் பூலோக சொர்க்கமான கஷ்மீரகமும் நேபாளத்தோடு கூடவே ஒட்டிக் கொண்டு நிற்கிறது. இந்தச் சிறிய நாட்டுக்குள் தான் உலகின் அதியுயரமான உச்சங்கள் பலகொண்ட சிகரங்கள் பலவிருக்கின்றன.

நேபாளம் பரப்பளவில் உலகில் 93 வது இடத்தில் இருக்கிறது. சனத்தொகையில் நேபாள நாட்டுக்கு 41 வது இடம். ஹிமாலயாவின் மலையுச்சிகளில் அமைந்திருக்கும் இந்நாடு உலகின் உயரத்தில் அமைந்திருக்கும் நாடு எனும் சிறப்பை திபெத்துடன் இணைந்து பெற்றுக்கொள்கிறது. இந்நாட்டில் 5000 மீட்டருக்கு மேற்பட்ட பிரதேசங்கள் என்பது வெகு சாதாரணம். உலகின் பத்து அதியுயர்ந்த மலையுச்சிகளுள் எவெரெஸ்ட் உட்பட எட்டு உச்சிகள் நேபாளத்தினுள் தான் அமைந்திருக்கின்றன. 20,000 அடிக்கு மேற்பட்ட சிகரங்கள் 240 க்கும் மேற்பட்டு இருக்கின்றன.

இந்நாடு சூழவர வடக்கில் சீனாவும் தெற்கு-கிழக்கு-மேற்கில் இந்தியாவின் உத்தர்கண்ட், உத்தர் பிரதேஷ், பிஹார், கிழக்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களைக் கொண்டிருக்கிறது. தலைநகரான காத்மண்டுவே நாட்டின் பெரிய நகராகவும் சனத்தொகை கூடிய நகராகவும் காணப்படுகிறது.

கி.வ. 1768 இல் தொடங்கிய ஷாஹ் வம்சத்து மன்னராட்சி கி.வ. 2008 வரைக்கும் தொடர்ந்தது. இறுதியில் நேபாளக் கம்யூனிஸ்ட் மாவோவாதிகள் நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் முடிவில் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு முக்கியக் கட்சிகளின் உடன்பாட்டுடன் கி.வ. 2008 மே மாதம் 28 ம் திகதியடன் பாராளுமன்ற முறை அமுல்படுத்தப்பட்டது.

 

நேபாளத்தில் இஸ்லாமின் பிரசன்னம்:

நேபாள நாட்டினுள் முஸ்லிம் பிரசன்னம் குறித்து நாம் யோசித்திருக்க மாட்டோம் தான்… ஏனெனில் நேபாளத்தை நினைத்தாலே அதனை ஓர் இந்து ராஜ்ஜியமாகவும் மாமனிதன் புத்தனின் பிறந்தகமாகவும்தான் கற்பனை பண்ணி வைத்திருந்திருப்போம். ஆனால் தொகையில் சிறிதளவாயினும் குறிப்பிட்டுக் கூறத்தக்க எண்ணிக்கையான முஸ்லிம் சிறுபான்மையொன்று வசிக்கின்றதென்பது சுவாரஷியத்தைக் கிளறிவிடும் அம்சமாகும். அதையும் தாண்டிப் புருவம் உயர்த்த வைக்கிறது அவர்களின் இனப் பன்முகத்தன்மை. நேபாள முஸ்லிம்கள் வித்தியாசமான பல்வேறுபட்ட இனக்குழுமங்களைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் நேபாளம் நோக்கி முஸ்லிம் குடிப்பெயர்வு நிகழ்ந்துள்ளது. குறிப்பாக ஆசிய மற்றும் திபெத்திய பிராந்தியங்களிலிருந்தே மிகப்பெரும்பாலான குடிப்பெயர்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. நேபாள மொத்த முஸ்லிம் தொகையில் 97% மக்கள் டெராய் வலயத்தில் தான் வசிக்கின்றனர். ஏனெஇய 3% ஆனவர்களும் காத்மண்டு நகர் மற்றும் மேற்கு மலைப்பிராந்தியங்களில் வசிப்பவர்களாவர். 4.2% ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேபாள முஸ்லிம்களின் மொத்தத் தொகை 971,056 எனக் கணிப்பிடப்படுகிறது. முஸ்லிம்களில் ரவுடஹட் நகரில் 16%, பாராவில் 11%, பார்ஸாவில் 16% என இந்தியாவின் பிஹாரை அண்டிய மத்திய டெராய் பிராந்தியத்தில் வசிக்கின்றனர். மேலும் கிழக்கு டெராய் பகுதியின் சிராஹி 7%, சன்ஸாரி 10% சப்டாரி 10% மக்களும் மேற்கு டெராயின் பான்கே 15% கபிலவஸ்து 15% என முஸ்லிம்களின் வீதாசாரம் இருக்கின்றது.

நேபாள தேசத்து முஸ்லிம்கள் பல்வேறுபட்ட இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களுள்…

  • மாதெஸி முஸ்லிம்கள்:

இவர்கள் நேபாள முஸ்லிம் சனத்தொகையில் 74% அளவில் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பான்மையினர். டெராய் பிராந்தியத்தில் வசிப்போரும் இவர்கள் தான். இவர்கள் 19ம் நூற்றாண்டுகளில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அரேபியா தேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த கலப்பினத்தவர் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் வீட்டு மொழியாக உருது மொழியைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் விவசாயம், கூலித்தொழில் போன்ற கீழ்மட்ட வேலைகளிலேயே தொழிலாகக் கொண்டிருப்பதோடு கல்வியிலும் பின் தங்கிக் காணப்படுகின்றனர்.

  • கஷ்மீரி முஸ்லிம்கள்:

இவர்கள் நேபாளத்திற்குக் குடிபெயர்ந்த முதற்தொகுதி முஸ்லிம்களாவர். இவர்கள் கி.வ. 1450 களின் பிற்பாடு அக்கால மன்னராக இருந்த ராம கல்லா என்பவரது முடிவின் பிரகாரம் அக்கால ராஜ்ஜியத்தின் ராஜதந்திர மற்றும் போரியல் உதவிகளுக்காகக் கூட்டிவரப்பட்டனர். இவர்கள் இப்போது வியாபாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுவதோடு சமூக அந்தஸ்திலும் ஓரளவு உயர்வாக இருக்கின்றனர். அரச பதவிகளில் அங்கம் பெற்றிருக்கும் பெரும்பாலான முஸ்லிம்களும் இவ்வகையினத்தவராகவே உள்ளனர். இவர்கள் நேபாளி மற்றும் உர்து கலப்பு மொழியொன்றைப் பேசுகின்றனர்.

  • சவுராட்டி முஸ்லிம்கள்:

16ம்  மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் வடக்கு இந்தியப் பிராந்தியங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் குழுக்களாவர். இவர்களும் இராணுவ மற்றும் விவசாய உற்பத்திகளின் உதவிக்காக அக்காலத்தில் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் நேபாள மொழியையே பேசுகின்றனர். மத ஈடுபாடு குறைந்த குழுவாகவும் இவர்களே உள்ளனர்.

  • திபெத்திய முஸ்லிம்கள்:

இவர்கள் திபெத்தை சீனா ஆக்கிரமித்த கி.வ. 1959 களின் பிற்பாடு நேபாளிற்கு வந்தவர்களாவர். ஏனைய நேபாள முஸ்லிம்களிலிருந்து மிக வித்தியாசமான கலாசாரத்தை இவர்கள் கொண்டிருக்கின்றனர். இவர்கள் திபெத்திய மொழியையே பேசுவதோடு திபெத்தியக் கலாசாரத்தைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

இவர்கள் இவ்வாறு வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாசாரக் கூறுகளைக் கொண்டிருப்பது ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டுச் செயற்பாட்டுக்கும் முன்னேற்றத்துக்கும் பிரதான தடைக் காரணி என அடையாளப்படுத்தப்படுகிறது.

கல்வி, சமூக, பொருளாதார நிலைகள்:

நேபாள நாட்டில் இந்திய, சீன நாடுகளின் மட்டுமல்லாது யூத பாடசாலைகளும் கூடக் காணப்படுகின்றன. இவை அவர்களவர்களது நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றும் பல்வேறு மறைமுகத் திட்டங்களோடு செயற்படுத்தப்படுவனவாகும். இவற்றுக்குமப்பால் குறிப்பாக முஸ்லிம்களாஇ இலக்கு வைத்துச் செயல்படும் கிறிஸ்தவ மிஷனரிகளும் காணப்படுகின்றன.

முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் ஆரமபகட்ட மாணவர்களுக்காக ‘மக்தப்’ எனும் பெயர்களில் பள்ளிக்கூடங்கள் கிராமங்கள் தோறும் இயங்கி வருகின்றன. இவற்றுக்குப் போதியளவான பயிற்சியுடைய ஆசிரியர்களோ, ஆசிரியர்களுக்கான சம்பளங்களோ எதுவும் இல்லை. ஒரு சில கிராமங்களில் மாத்திரம் இதனையும் தாண்டி இடைநிலைக் கல்வியைப் பெறக்கூடிய வசதியுள்ள பாடசாலைகள் காணப்படுகின்றன. அத்தோடு இஸ்லாமியக் கல்வியை வழங்கக் கூடிய மத்ரசாக்களும் விரல் விட்டெண்ணாக்கூடிய அளவிலேயே இருக்கின்றன.

ஒரு சில மாணவர்கள் இந்தியாவுக்கு மார்க்கக் கல்விக்காகப் பயணிப்பதோடு இன்னும் பலர் சவூதி மற்றும் எகிப்து நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விப் புலமைப் பரிசில்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் நேபாள முஸ்லிம்கள் மத சார்பற்ற அரச கல்விக் கூடங்களில் கற்பதில் ஆர்வம் காட்டாதிருப்பதோடு பொருளாதார வசதியின்மைகள் காரணமாக தனியார் கல்விக் கூடங்களை அணுகவும் வசதியற்றிருக்கின்றனர்.

அண்மைக்காலமாக இந்த நிலையிலிருந்து நேபாள முஸ்லிம்களை மீட்கும் நோக்குடன் பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் அங்கு கல்வி, மார்க்க விழிப்புணர்வுக்காக முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுள்  Al-Hira Educational Society, Islamic Development Bank of Jeddah என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பின்னையது மருத்துவ, விவசாய மற்றும் நிர்மாணத் தொழில் நுட்பத்துறைசார் வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குகின்றது. நேபாள முஸ்லிம் சமூகத்தில் 200 க்கும் குறைவான மருத்துவர்களும் அதைவிடக் குறைவான பட்டப்பின்படிப்புப் படித்தோருமே உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

பிரான்ஸ் முஸ்லிம்கள்

french-muslim-protest

 

இரு வாரங்களுக்கு முந்திய பிரான்ஸ் சஞ்சிகையான சார்ளி ஹெப்டோ மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிற்பாடு பிரான்ஸிய முஸ்லிம்கள் குறித்த நமது கவனம் அதிகரித்தது. இஸ்லாமிய மயமாகி வரும் ஐரோப்பாவில் இருக்கும் பெரிய சிறுபான்மைகளுள் ஒன்றாக பிரான்ஸ் சிறுபான்மை மக்களைக் கண்டு கொள்ள முடியும். அவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 50 இலட்சம் தொட்டு 60 இலட்சங்கள் வரை இருக்கலாமென மதிப்பிடப்படுகிறது. இது மொத்த சனத்தொகையில் 8% ஐ உள்ளடக்கியதாகும். அங்கு இன ரீதியாக மற்றும் மத ரீதியாக சனத்தொகைக் கணக்கெடுப்புக்கள் மேற்கொள்வது 1872ம் ஆண்டின் பின்னர் சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளதென்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் முஸ்லிம் சனத்தொகைக் கட்டமைப்பை 1999ம் ஆண்டு மேற்கொள்ளாப்பட்ட சுயாதீனக் கணக்கெடுப்பொன்றின் பிரகாரம் இவ்வாறு நோக்க முடியும்:

Algeria  1,550,000
Morocco  1,000,000
Tunisia  350,000
Turkey  315,000
Sub-Saharan Africa  250,000
Middle East  100,000
Asia (mostly Pakistan and Bangladesh)  100,000
Converts  40,000
illegal immigrants or awaiting regularisation  350,000
Other  100,000
Total  4,155,000

 

இஸ்லாம் பிரான்ஸின் இரண்டாவது பெரிய மதமாகும். அது கத்தோலிக்க மதத்துக்கு அடுத்த ஸ்தானத்திலிருக்கிறது. பக்கத்திலிருக்கும் அட்டவணையூடாக வட ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதைப் பார்க்கலாம். இதற்கு அடிப்படைக் காரணம் இந்நாடுகள் பிரான்ஸின் காலணித்துவ நாடாக இருந்தமையாகும்.

மிகப் பெரும்பாண்மையான பிரான்ஸிய முஸ்லிம்கள் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவினராகவே உள்ளனர். மேலும் அண்மைக்காலமாக பிரான்ஸிய சுதேச மக்களும் இஸ்லாமைத் தழுவும் வீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவர்களின் தற்போதைய தொகை 100,000 ஐத் தாண்டுவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இது வருடாந்தம் ஆயிரக்கணக்கில் அதிகரித்துச் செல்கின்றது.

 

பிரான்ஸில் முஸ்லிம் நுழைவு:

முதல் முஸ்லிம் காலடித்தடம் பிரான்ஸினுள் இஸ்லாமின் ஆரம்ப காலத்திலேயே பதிந்துவிட்டது. ஸ்பெயினைக் கைப்பற்றிய முஸ்லிம்கள் தென் பிரான்ஸையும் கி.வ. 759 வரைக்கும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

பின்பு உஸ்மானிய ஆட்சிக் காலங்களில் கி.வ. 1543-44 ம் ஆண்டு காலப்பகுதியில் உதுமானியர்களின் கடற்படைத் தளமொன்றும் தூளுன் எனுமிடத்தில் இருந்தது. இதற்குத் தளபதியாக கைருத்தீன் பர்பரோஸா என்ற வட ஆபிரிக்க பர்பர் இனத்தவரொருவர் இருந்துள்ளார்.

இறுதியாக கி.வ. 1960 களில் பிரான்ஸின் குடியேற்ற நாடுகளிலிருந்து பாரிய தொழிலாளர் நகர்வுகள் இடம்பெற்றன. இவர்கள் பெருமளவு வட ஆபிரிக்கர்களாகவே இருந்தனர். எனினும் பாரிஸ் நகரில் முதல் முஸ்லிம் பள்ளிவாயல் 1922ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதுவே இன்று பிரான்ஸின் பாரிய முஸ்லிம் வழிபாட்டிடமாகக் காணப்படுகின்றது. இன்றைய தரவுகளின்படி முழு பிரான்ஸிலும் 2000 க்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் காணப்படுவதென்பது இஸ்லாமின் துரித வளர்ச்சியைக் காட்டுகின்றது. மேலும் அவர்கள் வருடாந்தம் ரமழான் நோன்பு போன்றவற்றை ஆர்வத்துடன் பிடிப்பதோடு, பன்றியிறைச்சி போன்றவற்றை மிகக் கண்டிப்புடன் தவிர்ந்து வருகின்றனர். பிரான்ஸிய முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் பிரதான இரு அமைப்புக்களாக “Federation of the French Muslims” (Fédération des musulmans de France), “Union of Islamic Organisations of France” (Union des organisations islamiques de France) ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். இதில் முதலாவது அமைப்பு மொரோக்கோ முஸ்லிம்களின் ஆதரவு அதிகம் உள்ள அமைப்பாகும்.

 

கல்வி நிலை:

பிரான்ஸ் மதச் சார்பற்ற நாடென்ற வகையில் அங்கு அரச பாடசாலைகளில் அனைவரும் கற்கலாம்… ஆனால் மதம் சார்ந்த எதுவும் கற்றுக்கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் தனியார் பள்ளிகளூடாக மதக் கல்விகளைப் பெற்றுக்கொள்ள எத்தடையும் இல்லை. அவ்வகையில் முதல் முஸ்லிம் பாடசாலை பாரிஸின் வட கிழக்கிலுள்ள  Aubervilliers எனும் நகரில் 2001ம் ஆண்டு தாபிக்கப்பட்டது. இவை பணம் செலுத்திக் கற்க வேண்டிய பாடசாலைகளாக உள்ளன.

 

ஹிஜாப்:

பிரான்ஸின் ஹிஜாப் பிரச்சினை உலகப் பிரசித்தம் வாய்ந்தது. பிரான்ஸில் ஹிஜாபுக்கான போராட்டம் இஸ்லாம் குறித்த பாரிய கவனயீர்ப்பை ஏற்படுத்தியதென்றால் அது மிகையல்ல. மதச்சார்பற்ற கொள்கை மிகக் கடுமையாகப் பின்பற்றப்படும் பிரான்ஸில் 1989 இன் பிற்பாடு ஹிஜாப் என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாக மாறிப்போனது.

படிப்படியாக முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் மேலும் இறுக்கமாக்கப்பட்டுக் கொண்டே வந்தது. இறுதியாக பிரான்ஸின் மதச் சார்பற்ற கொள்கையை மேலும் இறுக்கமாக்கி பொது ஸ்தலங்களில் மத அடையாளங்களை அணிய முடியாதென்ற சட்டம் பொதுமக்கள் அங்கீகாரத்துடன் 2003 ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

கனடா முஸ்லிம்கள்

dumbass-canadian0imam

கனடா

தலைநகரம்: ஒட்டாவா

முக்கிய நகரங்கள்: டொரண்டோ (பெரிய நகரம்), வான்கூவர், மொன்றியல்

சனத்தொகை: 35,675,834 (2014) – சது.கி.மீட்டருக்கு 3.4 பேர்

இனக்குழுமங்கள்: வெள்ளையர் 76.7%, ஆசியர் 14.2%, சுதேசிகள் 4.3% கறுப்பர் 2.9% லத்தீன் அமெரிக்கர் 1.2%

மொழிகள்: ஆங்கிலம், ஃப்ரென்ச், இவை தவிர Chipewyan, Cree, Gwich’in, Inuinnaqtun, Inuktitut, Inuvialuktun, North Slavey, South Slavey, Tłı̨chǫ எனப் பல சுதேச மொழிகள் உள்ளன

சமய நம்பிக்கைகள்:

நாணயம்: கனேடியன் டொலர்

பொருளாதாரம்: கனிப்பொருள் வளம், கனரக இயந்திரங்கள் உற்பத்தி

நாட்டின் பரப்பளவு: 9,984,670 சது.கி.மீ

ஆட்சி முறைமை: பாராளுமன்ற யாப்புக்குட்பட்ட சமஷ்டி முடியரசு

பாராளுமன்றம்: செனட் மற்றும் மக்கள் சபை எனும் பிரிவுகள் கொண்டது.

பிரதமர்: ஸ்டீபன் ஹார்பர்

கவர்னர் ஜெனரல்: டேவிட் ஜோன்சன்

 

ஆர்ட்டிக் கடல் கொண்ட நாடு… உலகின் ஒரு கோடிப் புறத்திலே பனி சூழப் பெற்றிருக்கும் நாடு தான் கனடா. ஒரு காலத்திலே அபோரிஜின்கள் மற்றும் எஸ்கிமோக்களால் நிரம்பி பனியின் இயற்கை தந்த வாழ்வு முறை ஓங்கியிருந்த நாடு இது. இற்றைக்கு ஐந்து நூறாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயராலும் பிரான்சியராலும் கனடா காலனித்துவத்துக்குட்படுத்தப்பட்டது.

இந்நாடு கிழக்கிலே நெடுகவும் அத்திலாந்திக் கடலோடும் தெற்கிலே மிக நீண்ட அமெரிக்க நில எல்லையோடும் மேற்கிலே  பசிபிக் பிரமாண்ட சமுத்திரத்தையும் வடக்கிலே தீவுகளாகவும் ஏரிகளாகவும் ஆர்ட்டிக் கடலோடு சங்கமிக்கும் எல்லைகளோடும் வரப்பெற்றிருக்கின்றது. நிலப் பரப்பளவில் பார்த்தால் கனடா உலகின் நான்காவது பெரிய நாடாகத் திகழ்கிறது. நிரம்பியிருக்கும் நீர்ப் பரப்புக்களையும் இணைத்துப் பார்ப்பின் உலகில் ரஷ்யாவுக்கு அடுத்துப் பெரும் தேசம் கனடாதான்.

கொமன்வெல்த் உறுப்புரிமை பெற்ற நாடான கனடா உண்மையில் இன்னும் ஐக்கிய இராச்சிய கண்காணிப்பின் கீழ் உள்ள நாடாகவே உள்ளது. அவ்வகையில் இங்கு மகாராணியின் பிரதிநிதியொருவரும் இருக்கின்றார். மேலும் பிரிட்டிஷின் இரண்டாம் எலிஸபத்தே அங்கு அரசுத் தலைவராகவும் கருதப்படுகின்றார். மிகப் பெரும் முன்னேற்றமடைந்த பாரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள கனடா உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாளராகத் திகழ்கின்றது. மிக மலிவாக உள் நாட்டிலேயே கிடைக்கும் மூலப் பொருட்கள் முக்கிய காரணமாகும். அத்தோடு அமெரிக்காவுடனான பொருளாதாரக் கூட்டுக்களும் குறிப்பிடத்தக்க காரணியே எனலாம்.

உலக தலாவீத வருமான அடிப்படையில் எட்டாவது இடத்திலிருக்கும் கனடா இன்னும் பல வழிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் நாடாகும். அத்தோடு மனித அபிவிருத்திச் சுட்டெண், சுதந்திரம், உரிமைகள் என அனைத்தும் மிக உயர் தரத்தில் காணப்படுகின்றன. உலகில் அதிகூடிய கல்வியறிவுடையோர் கொண்ட நாடாகவும் இது இருக்கின்றது. சுமார் 51% க்கும் மேற்பட்டோர் அங்கு பல்கலைக்கழகக் கல்வியைப் பூர்த்திசெய்திருக்கின்றனர். அத்தோடு நேட்டோவிலும் கனடா மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது.

கனடாவில் இஸ்லாம் அறிமுகமாகிறது

பல நூற்றாண்டுகளாக வெளியுலகின் தொடர்பே இல்லாத கண்டமாக வடக்கு மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்கள் இருந்தன. 15ம் நூற்றாண்டின் இறுதிக் கூறுகளில்தான் ஆங்கிலேயர், போர்த்துக்கேயர், ஸ்பானியர் மற்றும் பிரான்சியர் ஆகியோரின் நாடுபிடிக்கும் பேராசியினாலும் பொருளாதார மீவிருப்பங்களாலும் வெளியுலகுடன் தொடர்புபட்டன. அதற்கும் பல தசாப்தங்களுக்குப் பின்னர்தான் முஸ்லிம்களதும் இஸ்லாமினதும் அறிமுகம் முறையாக அந்தக் கண்டத்தினுள் ஊன்றியது.

அவ்வகையில் இங்கிலாந்தியரதும் பிரான்சியரதும் காலனித்துவத்தின் பிற்பாடு முஸ்லிம்களின் பிரசன்னம் 1871 சனத்தொகைக் கணக்கெடுப்பில் உணரப்பட்டது. அப்போது அவர்களின் தொகை வெறும் 13 ஆக இருந்தது. அவர்கள் ஐரோப்பிய முஸ்லிம்களாகக் காணப்பட்டனர். அதன் பின்னர் அங்கு ஏற்பட்ட குறிப்பிட்த்தக்க முஸ்லிம் நகர்வு 1ம் உலக மகா யுத்த காலப் பகுதியோடு துவங்கியது. அவர்களில் அநேகர் பொஸ்னியா, அல்பேனியா தேச முஸ்லிம்களாக இருந்தனர். இவர்கள் யுத்த வேலைகளுக்காகவே கொண்டு வரப்பட்டனர்.

கனடாவில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாயல் 1938 எட்மண்டன் எனும் நகரில் கட்டப்பட்டிருக்கிறது. அப்போது அங்கு முஸ்லிம் சனத்தொகை 700 அளவில் காணப்பட்டது. அதன் பின்பு மெதுவான குடிப்பெயர்வுகள் நிகழ்ந்த போதிலும் 1960-70 காலப்பகுதிகளில் குடியேற்ற விதிமுறைகள் தளர்த்தப்பட்டதோடு குறிப்பிட்த்தக்க முஸிம் குடியேற்றங்கள் நிகழ்ந்தன.

கனடாவில் முதலாவது மத்ரசாவாக இந்திய பாரம்பரிய ஹனபி முறையில் அமைந்த தப்லீக் மத்ரசாவொன்று 1983ம் ஆண்டில் ஒன்றோரியோ நகரில் தாபிக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு ஹிப்ழ், ஆலிம் பயிற்சிகளாஇ வழங்குகின்றது.

2011 கனேடிய அரசின் உத்தியோகபூர்வக் கணக்கெடுப்பின்படி அங்குள்ள முஸ்லிம் சனத்தொகை 1,053,945 ஆக இருந்தது. இது மொத்த சனத்தொகையில் 3.2% ஆகும். அத்தோடு கிறிஸ்தவத்துக்கு அடுத்ததாக பெரிய மதமாகவும் இஸ்லாமே இருக்கின்றது. குறிப்பாக டொரன்றோ பெருநகர்ப் பிரதேசத்தில் சனத்தொகையின் 7.7% ஆனவர்கள் முஸ்லிம்கள் என்பது கவனிக்கத்தக்க விடயமாகும். அத்தோடு கனடாவில் ஷீயாக்களும் அஹ்மதிக்களும் கணிசமான அளவு காலூன்றிக்கொண்டிருக்கின்றனர். அதிலும் அஹ்மதிக்கள் அரச மட்டங்களில் பெரும் ஆதரவைப் பெற்று பாரிய கட்டமைப்போடும் தமக்கென தனியாக பெரும்பெரும் பள்ளிவாசல்களைக் கட்டி அரச ஆதரவோடு இருந்துவருகின்றனர்.

தற்போதைய சனத் தொகையின் படி வரிசைக்கிரமமாக நோக்கினால் கிழக்கு ஐரோப்பா, சோமாலியா, லெபனான், தெற்காசியா, ஈரான், வட ஆபிரிக்கா என முஸ்லிம்களின் பிரசன்னம் இருக்கிறது.

இவர்களின் அண்மைய குடிப்பெயர்வுகள் பல்வேறு காரணிகளால் நிகழ்ந்தன. உயர்கல்வி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, மத மற்றும் அரசியல் சுதந்திரம், சிவில் யுத்தங்கள் என அவற்றைப் பட்டியல்படுத்தலாம். குறிப்பாக பொஸ்னியா மீதான ஆக்கிரமிப்புக்கள், லெபனான் மற்றும் சோமாலியா சிவில் யுத்த்த்தின் போது பிரதான அகதிகள் தஞ்சம் புகிடமாக கனடா இருந்து வந்தது.

 

இஸ்லாம் இன்றைய கனேடிய சமூகத்தில்

உலகளவில் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட முஸ்லிம் சிறுபான்மைக் குழுமங்களில் ஒன்றாக எம்மால் கனேடிய முஸ்லிம் சிறுபான்மையை நோக்க முடியும். அதற்கு அங்கு அதிகளவில் இடம்பெயர்ந்த முஸ்லிம் புலமைத்துவவாதிகள் முக்கிய காரணமெனலாம்.

இப்போது கனடவின் முஸ்லிம்களில் சுமார் 10% ஆனவர்கள் தான் கனடாவிலேயே பிறந்தவர்களாவர்.

முஸ்லிம்களின் கல்விநிலை மிக உயர்தரத்தில் இருப்பதாகக் கனேடிய தரவுகள் கூறுகின்றன. முஸ்லிம் சனத்தொகையில் 6%க்கும் மேற்பட்டோர் முதுமானிப் பட்டம் பெற்றவர்களாக இருக்கின்றனர். இது மற்ற மதத்தவர்களைவிட பல மடங்குகள் உயர்வீதமாகும். ஆனால் கனடா யூதர்கள் இதில் 8.8% என்பது காவனிக்கத்தக்கது. அத்தோடு முஸ்லிம்கள் மத்தியில் கலாநிதிக் கற்கையை முடித்தவர்கள் 6,310 புலமையாளார்கள் என்பது இலங்கைச் சிறுபான்மையாகிய எமக்கு மலைப்பையும் வியப்பையும் தருகிறது. நாம் செல்ல வேண்டிய இன்னும் நீண்ட பயணத்தையும் எமக்கு உணர்த்துகிறது. இது கனேடிய முஸ்லிம்களின் 1.5% ஆகும்.

கனடாவில் பல்வேறு தேசியப் பங்களிப்புக்களாஇச் செய்த போதிலும் மொத்த ஊழியர்படையில் அதிகம் வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சமூகமாக முஸ்லிம்களே காணப்படுகின்றனர். கனடாவில் மொத்த வேலையற்றோர் வீதம் 7.4% வீதமாக இருக்க அது முஸ்லிம் சமூகத்துள்ளே 7.4% ஆக இருக்கிறது. கனேடிய முஸ்லிம்களில் 27% ஆனவர்கள் விற்பனைத் துறைசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அடுத்து 16% ஆனவர்கள் நிதித் துறையிலே பணிபுரிகின்றனர்.

கனடவிலே சமயம் சார்ந்த மற்றும் சாராத பல நிறுவன்ங்கள் முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் சமயம் சாரா நிறுவன்ங்களாக Muslim Canadian Congress, Canadian Muslim Union, Muslims for Progressive Values – Canada, The Coalition for Progressive Canadian Muslim Organizations (CPCMO) என்பன குறிப்பிடத்தக்கவை.

சுன்னி முஸ்லிம்கள்  சார்ந்த நிறுவனங்ககளாக Islamic Society of North America (ISNA), Islamic Circle of North America (ICNA), Muslim Association of Canada (MAC), The Ummah Masjid (Halifax Muslim Community), Islamic Supreme Council of Canada என்பன குறிப்பிட்த்தக்கவை.

இவை தவிர்த்து இஸ்லாமிய அறிவுலகின் பெரும் ஜாம்பவான்கள் பலரும் கனேடிய முஸ்லிம் சமூகத்தில் உள்ளனர். அவர்களுள் கலாநிதி ஜாஸிர் அவ்தா, பேராசிரியை இங்ரித் மெட்சன், பிரபல தாஈ பிலால் பிலிப்ஸ்  மற்றும் பாடகர் தாவூத் வார்ன்ஸ்பி அலி போன்ற ஆளுமைகள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பல்கேரியாவில் இஸ்லாம்

P07-140223-304

பல்கேரியா குடியரசு

தலைநகரம்: ஸோஃபியா

சனத்தொகை: 7,364,720 (சது.கி.மீட்டருக்கு 66.2 பேர்)

இனக்குழுமங்கள்: பல்கேரியர் 84.6% , துருக்கியர் 8.9%, ரோமானியர் 4.8%, ஏனையோர் 1.7%

மொழிகள்: பல்கேரியன் (உத்தியோகபூர்வ மொழி), துருக்கிய மொழி

சமய நம்பிக்கைகள்: ஒர்த்தொடக்ஸ் கிறிஸ்தவம் 82.2%, இஸ்லாம் 12.2%,  நாத்திகம் 3.9%, கத்தோலிக்கம் 0.6%, புரட்டஸ்தாந்து 0.2%, ஏனையவை 0.1%

நாணயம்: லிவ் (BGN)

பொருளாதாரம்: கனரக தொழிற்சாலைகள்,  சக்திவள உற்பத்தி, விவசாயம்,

நாட்டின் பரப்பளவு: 110,994 சது.கி.மீ

ஆட்சி முறைமை: பல்கட்சிப் பாராளுமன்றக் குடியரசு

பாராளுமன்றம்: நெஷனல் அசெம்பிளி

அரசுத் தலைவர் பிரதமர்: ரோஸன் ப்ளிவ்னிலீவ்

ஜனாதிபதி: பொய்க்கோ பொரிஸொவ்

 

பல நாடுகள் விதவிதமான முறைகளில் எமக்கு அறிமுகமாகின்றன. அந்தந்த நாடுகள் சிற்சில துறைகளில் இருக்கும் அபரிமித ஆற்றல்களூடாகப் பெறும் பிரபல்யங்கள் அந்தத் தேசங்கள் குறித்த செய்திகளை எம்மை அடையச் செய்கின்றன. இலங்கைக்குத் தேயிலையும் கிரிக்கெட்டும் போல… இவற்றையெல்லாம் தாண்டி உலகில் பல நாடுகள் எம்மத்தியில் பேசப்படாமலேயே இருந்துவிட்டுப் போகின்றன. அவ்வகையில் எமக்கு மத்தியில் பேசப்படாது போனாலும் இஸ்லாமிய உலக வரலாற்றிலே உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் காலங்களில் முக்கிய கேந்திர நிலையமாக விளங்கிய பல்கேரியா நாட்டிலே வீசும் இஸ்லாமிய சுவாசங்களை நுகர்வோம்.

பல்கேரியா நாடு தென்கிழக்கு அயிரோப்பாவிலே அமைந்திருக்கும் மத்திய அளவு பருமன்கொண்ட நாடாகும். இதன் வடக்கில் ரோமானியாவும் மேற்கில் சேர்பியா மற்றும் மஸிடோனியாவும் தெற்கில் கிரேக்கம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் கிழக்கிலே 110,994 கி.மீட்டர் நீண்ட நீளத்தில் கருங்கடலையும் தனது எல்லைகளாகக் கொண்டமைந்துள்ளது. அயிரோப்பியா நாடுகளில் 16வது அளவு பருமன் கொண்டதாக பல்கேரியா காணப்படுகிறது.

வரலாற்றுவெளியிலே காலாகாலமாக பல்கேரியாவை கிரேக்கர்கள், ரோமானியர், உதுமானியர் எனப் பல்வேறு அரசவம்சங்கள் ஆட்சிசெய்துவந்திருக்கின்றன. அவ்வகையில் முதல் பல்கேரியா பேரரசு கி.வ. 681-1018 காலப்பகுதிகளிலும் இரண்டாவது பல்கேரியா பேரரசு கி.வ. 1185-1396 காலப்பகுதிகளிலும் நிகழ்ந்ததென அடையாளப்படுத்துவர். இறுதியாக தொடர்ந்துவந்த அயிந்து நூற்றாண்டுகள் உதுமானிய ஆட்சியின் கீழ் பல்கேரியா இருந்தது. பின்னர் கி.வ. 1877-78 காலப்பிரிவில் இடம்பெற்ற துருக்கி-ரஷ்ய யுத்தத்தின் காரணமாக வித்திடப்பட்டு கி.வ. 1908 ஒக்டோபர் 5 இல் உதுமானியரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நவீன பல்கேரியா உருவாகியது.

தனிநாட்டு உருவாக்கத்திலிருந்து பல்வேறு பிரச்சினைகளில் பல்கேரியா விழுந்தெழுந்து வந்திருக்கின்றது. குறிப்பாக இரு உலக மகா யுத்தங்களிலும் ஜெர்மனியை எதிர்த்து நின்றது. 1946 களோடு பல்கேரியா தனிக்கட்சி ஆட்சிகொண்ட சோஷலிஸ தேசமாக உருவெடுத்தது. இது அன்றைய சோவியத்தின் கிழக்கு அயிரோப்பா கிளையின் ஓர் அங்கமாகவே இருந்தது. இறுதியில் 1989ம் ஆண்டு டிசம்பரில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி பல்கட்சித் தேர்தல் முறைமைகளுக்கு அங்கீகாரம் அளித்தது. அதன் பின்பு பல்கேரியா மெதுமெதுவாக முதலாளித்துவ தேசமாக மாற்றமடைந்தது.

இன்றைய பல்கேரியா 28 நிர்வாக மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. எவ்வாறாயினும் தலைநகரைச் சூழவுள்ள மாகாணங்களே மக்களின் கேந்திரக் குடியேற்றங்களாக அமைந்திருக்கின்றன. வர்த்தக, கலாசார நடவடிக்கைகள் அனைத்தும் தலைநகர் ஸோஃபியாவை மையம் கொண்டே சுழல்கின்றன.

1991 இல் உருவாக்கப்பட்ட புதிய யாப்பின்படி அங்கு பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி நிலவுகிறது. அயிரோப்பிய யூனியன், நேட்டோ, அயிரோப்பிய கவுன்சில் என்பவற்றில் அங்கத்துவம் வகிப்பதோடு அயிரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமையத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும் காணப்படுகிறது. அயிக்கிய நாடுகள் அமையத்தின் பாதுகாப்பு வாரியத்தில் மும்முறைகள் தற்காலிக உறுப்பினராகவும் இருந்தது.

பல்கேரியாவில் இஸ்லாமின் பரவல்:

பல்கேரியாவின் மிகப் பெரிய சிறுபான்மையினராக முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். மொத்த சனத்தொகையில் 12.2% ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்களின் மொத்த தொகை ஒரு மில்லியனை நெருங்குகின்றது. பல்கேரியா முஸ்லிம்கள் பிரதானமாக மூன்று இனக்குழுக்களில் உள்ளடங்கியிருக்கின்றனர். அவர்களுள் பிரதானமாக துருக்கியர் 700,000 ஐத் தாண்டியும் 130,000 க்குச் சற்று அதிகரித்த போமாக்ஸ் எனப்படும் பல்கேரிய இனத்தவரும் 103,000 அளவில் ரோமானிய இனத்தவரும் உள்ளனர். பெரும்பாலும் பல்கேரியா முஸ்லிம்கள் சுன்னி இஸ்லாமைப் பின்பற்றுவோராக இருக்கின்றனர். அண்ணளவாக 25,000 எண்ணிக்கையில் ஷீஆக்களும் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. அதேநேரம் காதியானிக்களது பரவலுக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவில் ஏனைய கிழக்கு அயிரோப்பிய நாடுகள் போன்றே இருப்பது போன்றே பல்கேரியா முஸ்லிம்கள் ஃபிக்ஹிலே ஹனபி சட்ட மரபையும் அகீதாவில் மாதுரீதிகளாகவும் காணாப்படுகின்றனர்.

பல்கேரியாவில் இஸ்லாமின் பிரவேசத்தைப் பொறுத்தவரையில் முதற் தடவையாக பல்கேரியாவினுள் முஸ்லிம்களின் பிரவேசம் கி.வ. 9ம் நூற்றாண்டுகளின் நடுக்கூறுகளில் இடம்பெற்றதென அப்போதைய போப், பல்கேரியா ஆட்சியாளருக்கு அனுப்பிய கடிதங்கள் போன்ற ஆவன்ங்கள் வழியாக அறியமுடிகிறது. பின்னர் 11ம் மற்றும் 12ம் நூற்றாண்டுகளில் துருக்கிய கோத்திரங்களின் இடப்பெயர்வோடு இத்தொகை இன்னும் அதிகரித்தது. இறுதியிம் 14ம் நூற்றாண்டுன் நடுப்பகுதியில் நிகழ்ந்த துருக்கியப் படையெடுப்புக்கள் கி.வ. 1390 ஆகும் போது முழு பல்கேரியாவையும் உதுமானிய ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தது. உதுமானிய ஆட்சியாளர்களும் சுன்னி இஸ்லாமின் பரவலுக்கு ஊக்குவிப்பு அளித்தனர்.

பல்கேரிய விடுதலை சிந்தனைகள் தொடங்கும் முன்னர் 19ம் நூற்றாண்டிலே 2356 பள்ளிவாசல்களும் 174 தக்கியாக்கள், 142 மத்ரஸாக்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துக்கள் பதியப்பட்டிருந்த்தாக ஆவாங்கள் சொல்கின்றன. எனினும் ரஷ்ய-துருக்கிய யுத்தம் முடிவடைந்த்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இப்போதைய கணக்கெடுப்புக்கள் அங்கு 1458 மஸ்ஜிதுகள் இருப்பதாகக் கூறுகின்றன.

குறிப்பாக உதுமானிய ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வந்த தீவிர கிறிஸ்தவ மதவாத ஆட்சிகளும் அதனடியாக வந்த மதவிரோத கம்யூனிஸ ஆட்சிக் காலங்களும் முஸ்லிம் வெகுமக்களை வெகுவாகப் பாதித்தன. கம்யூனிஸ்டான ஸிவ்கவ் என்பவரது ஆட்சியிலே முஸ்லிம் வெகுமக்களின் சுதந்திரங்கள் முற்றாகப் பறிக்கப்பட்டன. நாத்திகமே தேசத்தின் உத்தியோகபூர்வக் கொள்கையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டார்கள்; கொள்கைகள் கொளுத்தப்பட்டன. இஸ்லாமிய அடையாளம் தாங்கிய பெயர்களைக் குழந்தைகளுக்கு வைப்பதுகூடத் தடைசெய்யப்பட்டது. பல்கேரியா தேசியப் பெயர்களச் சூட்டிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். துருக்கிய மொழிப் பயன்பாடே தடுக்கப்பட்டது. இதன் விளைவாக 310,00 க்கும் மேற்பட்ட துருக்கிய இனத்தவர்கள் நாட்டை விட்டும் விரண்டோடினார்கள். கம்யூனிஸ்டுக்களின் வீழ்ச்சியின் பிறகே மீளவும் முஸ்லிம்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. அதன் பின்பு ஆரம்பகட்டமாக இளம்பராயத்தினருக்கு அல்குர்ஆனைப் போதிப்பதற்கான நிலையங்களைக் கிராமங்கள் தோறும் ஏற்படுத்தினார்கள். இன்று தம்மிடையே சொந்தமாகப் தினசரிப் பத்திரிகை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். அவ்வகையில் துருக்கிய, பல்கேரிய மொழிகளில் வெளியாகும் ‘முசல்மானி’ என்ற பத்திரிகை குறிப்பிடத்தக்கது.

பல்கேரியா முஸ்லிம்கள் இன்று:

பல்கேரியாவில் கடுமையாக மதச் சார்பின்மை நடைமுறைப்படுத்தப்பட்டதால் மார்க்கத்துடன் தொடர்புள்ள முஸ்லிம்களைக் காண்பதும் அண்மைக்காலம் வரை குறைவாகத்தான் இருந்தது. 2011ம் ஆண்டுக் கணக்கெடுப்பு ஒன்றின்படி பாரம்பரிய முஸ்லிம்களில் 3.2% வர்கள் தம்மை மதச் சார்பற்றவர்களாகத் தான் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். இத்தகையோரது தொகை 25,000 ஐயும் தாண்டுகின்றது.

மேலும் இதுவரையும் 48.6% ஆன முஸ்லிம்களே தம்மை முழுமையாக மதத்துடன் பிணைத்து அடையாளப்படுத்த விரும்புகின்றனர். 28.5% ஆனவர்கள் ஓரளவு மத விழுமியங்களைப் பேண முயல்கின்றனர். 41% ஆனவர்கள் இதுவரைக்கும் பள்ளிவாசல் சென்றதில்லை. அவர்களில் 59.3% ஆனவர்களுக்குத் தொழுகையென்றால்என்னவென்றே தெரியாது. அத்தோடு 39.8% ஆனவர்கள் போதைப்ப் பொருள் பாவனையிலுள்ளோர் என்பதோடு 43.3% முஸ்லிம்கள் மதுபாவனைக்கு அடிமைகள் என்பதும் பல்கேரியா முஸ்லிம்கள் குறித்த பாதக தரவுகளாகும்.

சிவில், சமூக, அரசியல், பொருளாதார செயற்பாடுகள்

கடந்த 130 வருடங்களாகவே பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வரும் பல்கேரியா முஸ்லிம்களை வழிகாட்டி நெறிப்படுத்தி விடுவதில் அங்கு செயற்படும் பல முஸ்லிம் இயக்கங்களும் அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன. துருக்கிய-போமக்-ரோமானிய என வித்தியாசமான இனக் குழுமங்களான முஸ்லிம்களை ஒழுங்குபடுத்துவதில் இந்த இயக்கங்கள் முழுக் கரிசனை காட்டுகின்றன.

அனைத்து அமைப்புக்களினதும் உயர் அமைப்பாக Higher Islamic Council காணப்படுகின்றது. ஒட்டுமொத்த பல்கேரியா முஸ்லிம் சமூகத்தினதும் தலைவராக பல்கேரியாவின் தலைமை முஃப்தியே காணப்படுகிறார். இவர் அயிந்து வருடங்களுக்கொரு தடவை இடம்பெறும் அமைப்புக்களின் பொது மாநாட்டு மேஜையில் தேர்ந்தெடுக்கப்படுவார். இவருக்குக் கீழால் ஒவ்வொரு மாகாணத்துக்கும் பொறுப்பான முஃப்திகளும் காணப்படுவர்,

பிரதான முஃப்தியின் மேற்பார்வையின் கீழேயே வக்ஃப் சொத்துக்கள் உட்பட முஸ்லிம்களின் சகல விவகாரங்களும் மேற்பார்வை செய்யப்படுகின்றன.

சுமார் 500 கிராமங்களில் அல்குர்ஆனை சிறார்களுக்குப் போதிப்பதற்கான நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. 2000 பொதுப் பாடசாலைகளில் இஸ்லாமைக் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்கேரியா முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அதன் பிரதான அரசியல் முகமாக The Movement for Rights and Freedoms (MRF) என்ற அமைப்புத் தான் அங்கு செயல்பட்டு வருகிறது. இதுவே துருக்கிய, போமாக்ஸ், ரோமானிய இன முஸ்லிம்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. எனினும் இதுவரைக்கும் இக்கட்சி இனத்துவக் கட்சியாக அடையாளப்படுத்தப்படவில்லை. இக்கட்சி பல்கேரியா முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருப்பதோடு இக்கட்சி பெற்றிருக்கும் 34 பாராளுமன்ற உறுப்பினர்களில் 32 பேர் துருக்கியர் என்பதும் குறிப்பிட்த்தக்கது. இக்கட்சி தற்போது பல்கேரியா ஆளும் அரசில் முக்கிய பங்கை வகித்து வருகின்றது. மத்திய, மாகாண அரசுகளிலும் மற்றும் உள்ளூராட்சித் தலைவர்களாகவும் தற்போது முஸ்லிம்கள் முக்கிய பங்கெடுத்து வருகின்றனர். அயிரோப்பியப் பாராளுமன்றத்தில் பல்கேரியா பெற்றுள்ள 18 உறுப்பினர்களில் மூவர் MRF இன் பிரதிநிதிகளாவர்.

பல்கேரியா முஸ்லிம்கள் பொருளாதார நிலைகளிலும் இன்னும் பாரிய முன்னேற்றத்தை வேண்டி நிற்கின்ரனர். அரசியல், சட்ட கெடுபிடிகள் அவர்களைத் தொடர்ந்தும் துரத்திக் கொண்டேயிருக்கிறது. பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதென்பது அங்கு வெறும் சாதாரண நிகழ்வாகப் பார்க்கப்படும் அளவுக்கு இஸ்லாமிற்குப் பெறுமானம் வழங்கப்படா நிலைமை அங்கு இருந்தது; இப்போதும் இருக்கிறது. அதற்கு தீவிர கிறிஸ்தவ மத வாதமும் மத விரோதக் கம்யூனிஸ சிந்தனைகளும் ஆழமாக வேர்விட்டிருந்தமையையே காரண்மஎனலாம்.

பல்கேரியா முஸ்லிம்களின் எதிர்காலம்:

பல்கேரியா அரசாங்கம் அந்த நாட்டு முஸ்லிம்களைத் தேசிய நீரோட்டத்தில் ஒன்று கலக்கச் செய்ய கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. உலகிலே மிகக் கடுமையாக மத வன்முறைக்குட்படுத்தப் பட்ட சிறுபான்மையினராக பல்கேரியா முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். அவர்களுள் இளைய சமுதாயத்தினரிடையே தற்போது கம்யூனிஸ காலத்தை விடவும் அதிக இஸ்லாமிய விழிப்புணர்வுள்ள சமூகமாக உருப்பெற்று வருகின்றனர் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். அவர்களுக்கான இஸ்லாமிய வகுப்புக்கள் முதற்கொண்டு இஸ்லாமைக் கற்பதற்கான வாய்ப்புக்கள் பரவலாக செய்யப்பட்டு வருகின்றன.

அதேநேரம் பல சுதேச பல்கேரியர்களும் இஸ்லாமில் ஆர்வம்கொண்டு அது குறித்துத் தேடத்தொடங்கியிருக்கிறார்கள். பலர் இஸ்லாமைத் தழுவும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

கம்போடிய முஸ்லிம்கள்

IMG_8846

கம்போடிய முடியரசு

தலைநகரம்: நொம் பென்

சனத்தொகை: 14.8 மில்லியன் (உலக சனத்தொகையில் 69வது இடம்)

இனக்குழுக்கள்: ஃக்மெர் (90%), வியட்நாமியர்(5%), சீனர்(1%), ஏனையோர்(4%) இங்கு 30க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடிகள் வசிக்கின்றனர்.

உத்தியோகபூர்வ மொழிகள்: ஃக்மெர் (அவுஸ்திரோ-ஆசிய மொழிக்குடும்பம்), ஃப்ரென்ச் மொழி

மதங்கள்: உத்தியோகபூர்வ மதம் தேரவாத பவுத்தம் (96.9%), இஸ்லாம் (1.9%), கிறிஸ்தவம் (0.4%), ஏனையவை (0.8%)

நாணயம்: ரியெல் (KHR)

வருமானம்: சுற்றுலாத்துறை, பழ உற்பத்தி, அரிசி உற்பத்தி

நாட்டின் பரப்பளவு: 181,035 சது.கி.மீ (சது.கி.மீட்டருக்கு 81.8 பேர்)

ஆட்சி முறைமை: யாப்புக்குட்பட்ட முடியரசு

அரசுத் தலைவர் பிரதமர்: ஹுன் சென்

மன்னர்: நரொடொம் சிஹாமொனி

 

கம்போடியா என்றும் கம்பூச்சியா என்றும் அழைக்கப்படும் தென்கிழக்காசிய பவுத்த பெரும்பான்மை நாடு குறித்து நாம் பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை தான். ஒரு காலத்தில் பெரும் இந்து சாம்ராஜ்ஜியமாகவும் அண்மைய நூற்றாண்டுகளில் தேரவாத பவுத்தத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் இத்தென்கிழக்காசிய நாடு வடமேற்கு மற்றும் வடக்கே தாய்லாந்தையும் வடக்கு மற்றும் வடகிழக்கே லாவோஸையும் கிழக்கே வியட்நாமையும் தெற்கு மற்றும் தென்கிழக்கே தாய்லாந்து விரிகுடாக் கடலையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.

இப்போதும் கூட நாம் கம்போடியாவில் அதன் தொன்மம் நிறைந்த இந்துப் பாரம்பரியத்தை நினைவூட்டும் சான்றுகளாக பாரிய, பிரமாண்ட கோவில்கள் மற்றும் கட்டடக் கலை வடிவங்களைக் காணலாம். அவற்றைக் காண்பதற்காகவே வருடந்தோறும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் கம்போடியா  நோக்கிப் படையெடுக்கின்றனர். இப்பாரம்பரியங்களிலும் பண்டைய மன்னர்களின் பெயர்களிலும் தென்னிந்திய வாசம் அச்சொட்டாகத் தெரிவதை நாம் காண முடியும்.

இத்தேசத்துக்குக் கம்போடியாவுக்கு முன்னோடியாக அமைந்த ‘கம்பூஜா’ எனும் பெயரை முதன்முதலில் பயன்படுத்தியவர் அங்கர் வம்ச மன்னரான கி.வ. 802 ஐச் சேர்ந்த இரண்டாம் ஜயவர்மன் என அறியப்படுகிறார். இவர்கள் காலத்தில்தான் புகழ்பெற்ற உலக சுற்றுலாத் தலமான ‘அங்கர்வாத்’ கட்டப்பட்டது; இந்து மதம் கோலோச்சியது. இறுதியில் அயுத்தயா வம்சத்திடம் ஆட்சி வீழ்ந்த்தும் பவுத்தம் எழுச்சி கண்டது. பிற்காலங்களில் கி.வ. 1683 முதல் பிரான்சின் காலனித்துவத்துக்குட்பட்டிருந்த கம்போடியா கி.வ. 1953 இல் அரசியல் சுதந்திரம் பெற்றது.

பிரான்சிய ஆட்சிக்காலங்களில் கம்போடியாவுடன் இணைத்து லாவோஸ் மற்றும் வியட்நாமும் பிரான்சின் கீழ் காலனித்துவப்படுத்தப்பட்டிருந்தது. அக்காலங்களில் இம்மூன்று நாடுகளும் இணைத்து இந்தோசீனா என்றே உலக அரங்கில் பிரபல்யம் பெற்றிருந்தது.

சுதந்திரத்தின் பின்னரும் தொடர்ந்தேச்சையாகப் பல சவால்களை நாடு எதிர்கொண்டது. அயல் நாடான வியட்நாமில் இடம்பெற்ற நீண்ட யுத்தம், கம்போடிய அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து வந்த படுகொலைகள் (1975-1979), இறுதியாக கம்போடிய-வியட்நாம் யுத்தம் (1979-1991) என ஸ்திரத்தன்மை இன்றிய தேசமாகவே தொடர்ந்தும் இருந்து வந்தது. இப்போதும் கூட ஓர் எல்லை நாடான தாய்லாந்துடன் தொடர்ந்தும் எல்லை தொடர்பான தகராறு இருந்தே வருகிறது.

இப்போது நாட்டை ஆட்சி செய்யும் ஹுன் சென்னின் 25 வருட நீண்ட ஆட்சிக் காலமே தென்கிழக்காசியாவில் அரச குடும்பம் அல்லாது நீண்ட கால ஆட்சியாகவும் காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் கம்போடியா தொடர்ந்தும் பட்டினியிலும் வறுமையிலும் முன்னணியில் இருக்கும் நாடாகவே இருக்கிறது. ஹுன் சென்னின் ஆட்சியின் கீழ் மனித உரிமைகள், சுதந்திரம் எள்ளளவும் பொருட்படுத்தப்படுவதில்லை என மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.

 

 

கம்போடியாவில் இஸ்லாம் அறிமுகமாகிறது

கம்போடியா நாட்டில் இஸ்லாமின் அறிமுகம் எம் நாட்டுடன் ஒப்பிடும் போது மிகக்குறுகிய வரலாற்றைக் கொண்டது கி.வ. 1837ம் ஆண்டுகளில் சாமியர்களின் (மத்தியகிழக்கு ஷாம் அல்ல) வருகையோடு இஸ்லாமின் பரவல் ஆரம்பித்தது. இவர்களின் பூர்வீக நிலம் வியட்நாமின் தென்கிழக்குக் கோடியாகும். இவர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவியதற்குப் பின்னணியில் இந்திய, மலேசிய, இந்தோனேசிய முஸ்லிம்களின் பங்கு இருந்ததெனக் கூறுகிறார் நொம் பென் அல்அஸ்ஹர் ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதான இமாம் ஹாஜி யூஸுஃப்.

இந்த சாம் இனத்தவர்கள் தம்மை தூதர்(ஸல்) அவர்களின் அருமை மனைவியர்களுள் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரழி) அவர்களுடைய தந்தை ஜஹ்ஷ் அவர்களைத் தமது பரம்பரையில் முன்னோர் எனக் கூறுகிறார்கள். எவ்வாறிருப்பினும் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்கள் இப்பிரதேசங்களில் காலடியெடுத்து வைத்ததற்கான வரலாற்று ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்த ஸஹாபாக்கள் கி.வ. 617-618 களில் அபிசீனியாவிலிருந்து கடல் வழியாக வந்தவர்கள் என நம்பப்படுகிறது.

இந்த சாமிய இனம் தென் கிழக்காசியாவில் உள்ள விஷேடமான இனக்குழுவாகும். இவர்களின் மொத்த எண்ணிக்கை 500,000 எனக் கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. இவர்களுள் 300,000 க்கும் அதிகமானோர் கம்போடியாவில் வசிக்கின்றனர். வியட்நாமில் 150,000 பேரும் ஏனையோர் மலேசியா, சீனா, தாய்லாந்து என மிகச் சிறிய தொகையினராக சிதறி இருக்கின்றனர். சீனாவிலுள்ளவர்கள் ஷீஆக்களின் இமாமிய்யா பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் எண்ணிக்கை 5000 தான். சாம் இனத்தவர்களில் அதி-பெரும்பான்மையினர் சுன்னி முஸ்லிம்களாவர். எனினும் இந்து, பவுத்த மதங்களைப் பின்பற்றுவோரும் சொற்பத் தொகையினர் உண்டு.

கம்போடிய சமூகத்தில் முஸ்லிம்கள்:

அரச தரவுகளின் படி சுமார் 3 இலட்ச முஸ்லிம்கள் சாம் எனப்படும் இனக்குழுவினராவர். இவர்கள் 1.9% சனத்தொகை எனக்காட்டப்பட்ட போதும் 15% அளவான தொகையினர் இருக்கலாமென நம்பப்படுகிறது. இவர்கள் சாம் எனப்பட்ட இராச்சியம் அமைந்திருந்த பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றவர்களாவர். சாம் என்ற பெயரில் இன்றும் கம்போடியாவில் ஒரு மாகாணம் காணப்படுகின்றது. சாம் இனத்தைச் சார்ந்தோர் நாட்டின் ஏனைய பாகங்களிலும் இப்போது சிதறி வாழ்கின்றனர். சாமியர்களைப் பொறுத்தமட்டில் நாட்டிலுள்ள ஏனையோரை விடவும் மதம், மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்களில் தனித்துவப்பட்டு நிற்கின்றனர். சாம் கிராமங்கள் நகரை விட்டும் ஒதுங்கியிருக்கும். ஒவ்வொரு கிராமமும் ஒரு மஸ்ஜிதை மையம் கொண்டதாக இருக்கும்.

பொதுவாகக் கம்போடிய முஸ்லிம்களுள் பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே வாழ்கின்றனர். கல்வியிலும் மிகவும் பின்தங்கித்தான் இருக்கின்றனர். இவர்களது வாழ்வாதாரம் பெருமளவு நெல்லுற்பத்தியைச் சார்ந்து தான் இருக்கிறது. இது தவிர தானியங்கள், பருத்தி, புகையிலை, தாவர எண்ணெய் வகைகள், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோரும் உள்ளனர். அன்றாடம் ஆறுகளிலும், குளங்களிலும் மீன்பிடிப்பது மூலமாக வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ளவேண்டிய பரிதாப நிலையிலும் அநேகர் இருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்காக ஹலால் உணவகங்கள் நடத்துவோரும் உள்ளனர்.

சிவில் அமைப்புக்களும் நிறுவனங்களும்

சாம் முஸ்லிம்கள் ஒரு போதும் தமது பிரச்சினைகளை வெளியே கொண்டு செல்வதில்லை. மாறாக தமது ஒவ்வொரு தனிப்பட்ட கிராமத்துக்கும் இருக்கும் தலைவரே இவையனைத்துக்கும் பொறுப்புக் கூறி முடிவுகளை எடுப்பார். கிராமங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்போடிய முஸ்லிம்களை ஒழுங்குபடுத்தும் உயர் அமைப்பாக Highest Council for Islamic Religious Affairs in Cambodia (HCIRAC) காணப்படுகிறது.

கி.வ. 1970ம் ஆண்டுகளில் கம்போடிய முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய இரு அமைப்புக்களைக் கம்போடிய முஸ்லிம்களின் புத்தெழுச்சியாக நோக்க முடியும். அவ்விரு அமைப்புக்களும்தான்…

  1. The Central Islamic Association of Cambodia

இவ்வமைப்பு கம்போடிய முஸ்லிம்களின் கலாசார சமூகக் கட்டுக்கோப்புக்களைப் பேணுவதைத் தனது இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.

  1. Cambodia Islamic Youth Association (CIYA)

இது கம்போடிய முஸ்லிம்களின் கல்வி, சமூக, மாணவர்களது மத விவகாரங்கள் மற்றும் மாணவர்களுக்கான உயர்கல்விப் புலமைப்பரிசில்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. இவ்வமைப்புத்தான் போர்க்காலங்களில் முஸ்லிம்களுக்காகக் கடுமையாகப் பாடுபட்டு நிவாரண வேலைகளில் ஈடுபட்டது.

கல்வி நிலையைப் பொறுத்தளவிலும் பின் தங்கிய நிலை தான் இன்னும் நிலவுகிறது. அவர்களது மொழிக்கு இன்னும் அரிச்சுவடி கூட இல்லை. அல்குர் ஆன் கூட இன்னும் சாமிய மொழிக்கு மொழிபெயர்க்கப்படாத நிலையிலுள்ளது. சொற்ப அளவானோர் வெளிநாடுகளில் கற்றுவிட்டு வருகின்றனர். கல்வி, முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் இன்னும் பல மடங்குகள் எழுச்சி பெறவேண்டியிருக்கிறது.

கம்போடிய அரசியலில் முஸ்லிம்கள்

70களின் பின்னர் அரசியலமைப்பு மாற்றத்தின் பின்பு முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு அங்கு அதிகரித்து வந்ததைக் காணலாம். அதன் பின்பு முஸ்லிம்களுக்கு செனட்டில் ஒரு உறுப்பினர் தொடர்ந்து இருந்துவருகிறார். பிரதிநிதிகள் சபையில் நால்வர் உறுப்பினர்களாக உள்ளனர். முஸ்லிம் ஒருவர் பிரதி உள்விவகார அமைச்சராகக் கடமையாற்றியும் இருக்கிறார். ஐவர் வெளிநாட்டமைச்சில் முக்கியப் பணிகளில் உத்தியோகம் புரிகின்றனர்.

வியட்நாமிய கம்யூனிச ஆக்கிரமிப்புப் பிரச்சினையின் போது முஸ்லிம்கள் கம்போடியாவுக்காக நின்றனர். அதனால் முஸ்லிம்கள் உயிருடன் புதைக்கப்பட்ட கொடூரங்களும் நிகழ்ந்தேறின. இன்னும் பலர் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். வேறு பலர் படுகொலை செய்யப்பட்டனர். பள்ளிவாசல்களும் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டன. கற்றவர்கள் கிராமங்கள் தோறும் தேடித்தேடிக் கொல்லப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். இதன் போது கல்வியறிவுள்ளவர்களாகக் கருதப்பட்ட 113 பேரில் 20 பேர் மட்டுமே எஞ்சினர். கி.வ. 1975 இன் பின் கம்யூனிசம் ஆட்சிக்கு வந்ததும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் சூறையாடப்பட்டனர். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துயரங்கள் கவ்வியதாக கம்யூனிச ஆட்சிக் காலம் கம்போடிய முஸ்லிம்களுக்கு மாறியது.

இறுதியாக…

கம்போடிய முஸ்லிம்கள் முன்னேற வேண்டிய மட்டங்கள் கண்ணுக்கெட்டாத தொலைவிலே இருக்கின்றது. அவர்கள் கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக மட்டங்களில் கம்போடிய தேசிய அளவில் இன்னுமின்னும் எவ்வளவோ போக வேண்டியுள்ளது. அவர்கள் மத்தியில் கற்றவர்கள் அதிகரித்து எழுச்சி ஏற்பட வேண்டும். இத்தனைக்கும் மத்தியில் கிறிஸ்தவ மிஷனரிப் பிரசாரகர்களின் கழுகுப் பார்வை அவர்கள் மீது பதிந்து தான் இருக்கிறது. எமது உம்மத்தின் ஓர் அங்கம் என்ற வகையில் அவர்களது முன்னேற்றத்துக்காக நாம் எம் பிரார்த்தனைகளில் முதலில் இணைத்துக் கொள்வோம்.

 

பிரேஸில் தேசத்தில் முஸ்லிம்கள்

tumblr_nvmt1pgf1A1tokksoo1_540

தலை நகரம்: பிரேஸிலியா

முக்கிய நகரங்கள்: ரியோ டி ஜெனிரோ, ஸாவோ பவுலோ

மொழி: போர்த்துக்கேய மொழி

நாணயம்: பிரேஸில் ரியல்

ஆட்சி முறைமை: யாப்புக்குட்பட்ட சமஷ்டிக் குடியரசு ஜனாதிபதி முறைமை

ஜனாதிபதி: டில்மா ரூஸஃப்

பரப்பளவு: 85,15,767 சதுர கி.மி.

சனத்தொகை: 202,656,788

 

தென்னமெரிக்கக் கண்டத்தில் மிகப் பெரிய நாடு பிரேஸில்தான். கிழக்கே அத்திலாந்திக் கடலின் நீண்ட கரையோரத்தையும் மேற்கு மற்றும் வடக்கிலே ஆர்ஜெண்டினா, உருகுவே, பராகுவே, பெரு, கொலம்பியா, கயானா என நீண்ட நில எல்லையைக் கொண்டது.

 

நம்மத்தியில் உதைப்பந்து விளையாட்டு மூலமாகவே வெகு பிரல்யமடைந்திருக்கும் பிரேஸில் தேசம் புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பெற்றிருக்கும் முக்கியத்துவம் வரையறுத்துக் கூற முடியாதது. பண்டைய செழுமை மிகு இன்கா நாகரிகம் பிரேஸில் தேசத்தையும் உள்ளடக்கியே இருந்தது. எனினும் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பின் பின்னரே வெளி உலகத்தோடு தொடர்புகள் ஏற்பட்டன.

 

பிரேஸில் தேசத்திலே முஸ்லிம்களின் வரலாறு குறுகிய கால அளவைக் கொண்டது என வரையறை செய்துவிட முடியாது. ஏனெனில் அங்கு போர்த்துக்கேயர் ஆக்கிரமிக்கத் தொடங்கியதுமே 1550 களில் ஆபிரிக்காவிலிருந்த கறுப்பு முஸ்லிம்களை பிரேஸிலுக்கு அடிமைகளாகக் கடத்திக் கொண்டு வந்தார்கள். இதனோடு முஸ்லிம்களின் வருகை அங்கு தொடங்கி விடுகிறது. ஆனாலும் அவர்களுக்கு தமது மார்க்கத்தைப் பேணி வாழ்வதற்கு போர்த்துக்கேயர்கள் இடம்வைத்துவிடவில்லை.

 

அடிமைகள் பெரியளவில் நாடு பெயர்த்தப்பட்ட பின் 20ம் நூற்றாண்டு வரைக்கும் சொல்லிக்கொள்ளும்படியான எந்தப் பாரிய முஸ்லிம் குடிப்பெயர்வும் இடம்பெறவில்லை. அவ்வகையில் அண்மைக்காலங்களில் தான் சிரியா மற்றும் லெபனான் நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அங்கு பரவலாகக் குடியேறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

 

ஆபிரிக்க முஸ்லிம் வழித்தோன்றல்கள்:

போர்த்துக்கேயரின் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க அடிமைகள் மொத்த பிரேஸிலின் சனத்தொகையில் 37% என்ற போதும் அவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாக இல்லை என்பது கவலை தரும் செய்தி. அவ்வாறே அடிமைகளின் வாரிசுகளில் சுமார் 3 மில்லியன் பேர் தம் சொந்த நாடுகளுக்கே திருப்ப அனுப்பப்பட்டதாகவும் பிரேஸில் வரலாறு கூறுகின்றது.

 

19ம் நூற்றாண்டுகளின் இரண்டாம் காற்பகுதிகளில் ஆபிரிக்கர்களிடையே ஒரு புத்தெழுச்சி ஏற்பட்டு பலர் தம் சொந்த மதமான இஸ்லாமை நோக்கி திரும்பத் தொடங்கினர். இதனால் அன்றைய கத்தோலிக்கர்களுக்கும் ஆபிரிக்கர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் பல ஆபிரிக்கர்களின் உயிரைக் காவுகொண்டது. அன்று நடந்த ஆபிரிக்கர் எழுச்சி தான் முழு வட/தென் அமெரிக்கக் கண்டங்களிலும்  ஏற்பட்ட பாரிய அடிமைகள் எழுச்சியாக இன்றுவரை நினைவுகூரப்படுகிறது. எனினும் அவர்கள் இஸ்லாம் நோக்கித் திரும்புவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1910 ஆகும் போது ஆபிரிக்கர்களில் 100,000 பேர் முஸ்லிம்களாக இருந்ததாக வரலாறு சொல்கிறது.

 

புதிய குடிப்பெயர்வுகள்:

ஆபிரிக்க பிரேஸிலியர்களின் புத்தெழுச்சிக்குப் பிற்பாடு கணிசமான மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய முஸ்லிம்களின் குடிப்பெயர்வு பிரேஸில் நோக்கி இடம்பெற்றது. ஆயினும் மத்திய கிழக்கு சார்ந்தவர்களில் கணிசமான அரபுக் கிறிஸ்தவர்களும் சிறிய தொகை ஷீஆக்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களின் மொத்த சனத்தொகை 35,207 பேர் எனக் கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் ஸாவோ-பவுலோ பகுதியிலேயே வசிக்கின்றனர். இப்பகுதிகளிலே அதிகமான அரேபிய உணவகங்கள், கடைகள் போன்ற வியாபார மையங்களையும் காணலாம். எனினும் இந்த வியாபாரங்களில் பெரும் பங்கு வகிப்பது அரபுக் கிறிஸ்தவர்கள்தான்.

 

முக்கியமாக எடுத்துக் கூறப்படவேண்டிய விடயம் என்னவென்றால் பிரேஸிலியர் மத்தியில் இப்போது இஸ்லாம் தொடர்பான தேடல் அதிகரித்து வருவதனை அங்கிருந்து வரும் தகவல்கள் எமக்குத் தெரிவிக்கின்றன. இதற்கு அண்மைய உதைப்பந்தாட்ட உலகக் கிண்ணாப் போட்டிகளின் போது மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமை அறிமுகப்படுத்தும் பாரியளவான தஃவா பணி குறிப்பிடத்தக்க சான்றாகும். அவ்வகையில் இஸ்லாமைப் புதிதாகத் தழுவிய 10,000 பேர் பிரேஸிலில் இருப்பதாகக் கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன.

 

இஸ்லாமின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக அங்கு தற்போது அதிகளவில் மஸ்ஜித்கள் மாத்திரமன்றி இஸ்லாமிய நூலகங்கள், சஞ்சிகைகள், இஸ்லாமியக் கலை-கலாசார மையங்கள், பாடசாலைகள் என்பனவும் நிறுவப்பட்டு வருகின்றன. புனித அல்குர்ஆனும் போர்த்துக்கேய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரேஸிலில் கட்டப்பட்ட முதலாவது பள்ளிவாசல் ஸாவோ-பவுலோவில் 1952ல் கட்டப்பட்டதெனக் கூறப்படுகிறது. பிரேஸிலிய முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியம் தரும் தகவல்களின்படி அங்கு தற்போது 115 பள்ளிவாசல்கள் உள்ளன. இவ்வமைப்புத் தான் முஸ்லிகளை ஒன்றிணைக்கும் பணியைச் செய்துவருகின்றது. பிரேஸில் பள்ளிவாயல்களில் ஒழுங்குமறையாகப் பட்டம் பெற்ற 15 இமாம்கள் மாத்திரமே இருக்கின்றனர். இவர்களுள் 7 பேர் மாத்திரம்தான் பிரேஸிலில் பிறந்தவர்கள். அவ்வகையில் பிரேஸில் இஸ்லாமின் தூதை முழு நாட்டிற்கும் எடுத்துச் செல்ல இன்னும் வெகு தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

 

பல்வேறுபட்ட இனப் பிரிவுகளிலிருந்தும்; ஆபிரிக்க வழித்தோன்றல்கள், மத்திய கிழக்கு குடிப்பெயர்வாளர்கள், புதிதாக இஸ்லாமைத் தழுவியோர் என மொத்த பிரேஸிலிய முஸ்லிம்கள் 700,000 முதல் 1,500,000 வரை இருக்கலாமென முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் பிரேஸிலிய வாமி நிறுவனத் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

 

பிரேஸிலில் முஸ்லிமாக வாழ்தல்

பிரேஸில் இடதுசாரி அரசியல் சித்தாந்தத்திற்குப் பிரபல்யமான நாடு. பொதுவில் இடதுசாரிகள் மானிட சுபீட்சத்தையும், விழுமியங்களையும், சுபீட்சத்தையும் பெரிதும் மதிப்பவர்கள். எனவே அதன் முழுப் பயனையும் பிரேஸில் வாழ் முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர்; அவர்கள் இஸ்லாமை சுதந்திரமாகப் பின்பற்ருகின்றனர் எனத் துணிந்து கூறலாம்.

 

  • இதுவரைக்கும் முஸ்லிம்களின் விஷேட தினங்கள் அரசாங்கத்தால் விடுமுறையாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை. ஆனால் சுய விடுமுறை பெறலாம்.
  • இஸ்லாமை எங்கும் பிரசாரம் செய்யவும் வழிபாடுகளை மேற்கொள்ளவும் தடையேதுமில்லை.
  • இஸ்லாமைப் பிரதிபலிக்கும் ஆடைகளைத் தாராளமாக அணியலாம்.
  • ஹலால் உணவைப் பெற முழு அனுமதி உண்டு. பிரேஸில் உலகின் முன்னணி ஹலால் உணவு உற்பத்தியாளர் என்பது கூடுதல் தகவல்.
  • முஸ்லிம் சிறார்கள் எங்கும் தமது கல்வியைப் பெற எல்லா உரிமைகளும் அங்கு வழங்கப்பட்டுள்ளன.

‘இந்தியா’ பற்றி கஷ்மீரி சிறுவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

327370618

‘கஷ்மீர்’ இந்திய வல்லாதிக்க எண்ணங்களுக்கு மிக அதிகளவில் பலிகொடுக்கப்படும் பிராந்தியம். நான் நினைக்கிறேன் பலஸ்தீனத்துக்கு அடுத்தபடியாக அரச வன்முறை அதிபயங்கரமாகக் கட்டவிழ்த்து விடப்படும் பிரதேசம் அது. ‘சதுர கிலோமீட்டர்களுக்கு’ இத்தனை இராணுவத்தினர் என்பதற்குப் பதிலாக ‘சதுர அடிக்கு’ இத்தனை இராணுவம் என முற்று முழுதாக துப்பாக்கி முனையில் ஆளப்படும் தேசம்.

பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பினர்கள் மீதும் வன்முறைகள் சர்வசாதாரணமாக நிகழ்த்தப்படுகிறது உலகின் அந்த அழகிய தேசத்தில்.

மின்சாரம் இல்லை; இணைய வசதி இல்லை; பத்திரிகைகள் இல்லை; பாடசாலைகள் இல்லை; இருவர் ஒன்றுகூடிப் பேசமுடியாது. அந்தளவு ஒடுக்குமுறை நிலவுகிறது.

‘ஊரடங்குச் சட்டம்’ அங்கு தேச வழமை. பெற்றோர் தம் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே அனுப்ப விரும்புவதே இல்லை. கஷ்மீரின் குழந்தைகள் ‘துப்பாக்கி வேட்டு’ ஒலிகள் கேட்டே வளர்பவர்கள். ஆர்ப்பாட்ட கோஷங்கள் அவர்களுக்கு சாதாரணம் அங்கே.

இந்நிலை நிலவுகையில் கஷ்மீர் சிறுவர்கள் சிலரிடம் ScoopWhoop என்ற இணையதளம் ‘இந்தியா’ குறித்து அவர்கள் என்ன கூறுகிறார்கள் அவர்களிடம் கேட்டே பதிவுசெய்திருக்கிறார்கள்.

13 வயதுடைய சபான் நிஸார் சொல்கிறான்:

“இந்தியா என்பது சிறுவர்களை அடிக்கின்ற பொலிஸ். எனது பெற்றோர் என்னை வீட்டுக்கு வெளியே செல்லவிடுவதில்லை. எமக்கு அதற்குப் பயம். ‘உன்னைக் கொன்றுபோடுவார்கள்’ என்று எனது பெற்றோர் சொல்கிறார்கள். எனக்கு விளையாட முடியாது. நான் கடந்த பத்து வருடமாக எந்த விளையாட்டும் விளையாடவில்லை. எமக்குப் பயம். எமக்கு சுதந்திரம் வேண்டும். நான் வெளியே சென்று போராட வேண்டும். ஆனால், எனது பெற்றோர் என்னை அறைக்குள் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். எனக்கு அதன் கோஷங்கள் மாத்திரமே இங்கு கேட்கின்றது.”

ஏனைய சிறுவர்களது வாக்கு மூலங்களை அவ்வாறே ஆங்கிலத்தில் தருகிறோம்.

Muawin Tasneem, 12 years

“India is tyrant. India kills people and disappears them. I want free Kashmir. I don’t want to be with India or with Pakistan. I am afraid to go out. Policemen can do anything to me. I can’t trust them. They can kill me. I rarely study. And I can’t play outside. Who should I play with? The Indian army men on the street?”

Rida Shafi, 9 years

“I have seen my parents expressing hate against India since my childhood. And that’s why I get angry. I, too, hate India”

Mohsin Wani, 13 years

“I was always confused why my parent supported Pakistan during cricket played between India and Pakistan. I never asked them. But as I grew up, my playmates and my class fellows informed me about the Indian oppression in Kashmir and of late, day by day, I understand this fact more and more.”

Danish, 12 years

“India is a cunning country. They oppress us. If it would have been our own country they wouldn’t have killed so many people. We don’t like to be with India.”

Mehreen, 14 years

“India is killing girls in Kashmir. I saw the images on TV. I do not go out; I fear the pellets may hit me too. They blind everyone. I don’t like India. I don’t want to stay with India. They are killing everyone here. India is instilling fear in everyone. We don’t feel safe anymore.”

கஷ்மீர் மட்டுமல்ல இந்தியா எங்குமே சிறுவர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. ஆனால், கஷ்மீர் மிக அபாயமான கட்டத்தில் இருக்கின்றது. சிறுவர்கள் அங்கு திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றனர். இந்தியா ஒருபோதும் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர மாட்டாது. அரசியல்வாதிகளுக்கு அரசியல் நடாத்தவும் ஏதும் வேண்டுமல்லவா? காங்கிரஸ் பி.ஜே.பி. மீதும், பி.ஜே.பி. காங்கிரஸ் மீதும் பழிபோட்டே காலங்கடத்துவார்கள். இருவரும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு விரல்நீட்டுவர்.

இந்தப் பழிபோடல் விளையாட்டில் பரிதாபம் கஷ்மீரிகள். இந்தியா சிறுவர்களை இழக்கிறது; சிறுவர்கள் தம் குழந்தைப் பருவத்தை இழக்கிறார்கள். இந்தியா கண் முன்னே சிதைகிறது.

துருக்கியர்களுக்குப் பெண் கொடுப்பதில் போட்டி போடும் அரபுக்கள்:

32017417523318

கடந்த வருடங்களில் துருக்கிய ஆண்களுக்குத் தமது பெண் மக்களைத் திருமணம் செய்துகொடுக்கும் அரபுக்களின் தொகை சடுதியாக அதிகரித்து வருவதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதில் குறிப்பாக 2015 இல் 3,569 சிரியப் பெண்கள் துருக்கிய ஆண்களைத் திருமணம் செய்திருந்ததோடு, இவ்வெண்ணிக்கை 2016ம் ஆண்டில் 6,495 ஆக அதிகரித்திருந்தது.

ஒப்பீட்டளவில் துருக்கியப் பெண்களை மணக்கும் அரபு ஆண்களை விடவும் துருக்கிய ஆண்களுக்குத் தமது பெண் மக்களைக் கொடுக்கும் அரபுப் பெற்றோரே அதிகமாகும் என அப்புள்ளிவிபரம் கூறுகின்றது.

2016 இல் துருக்கிய ஆண்கள் வேற்று நாட்டுப் பெண்களை மணமுடிப்பது 20% ஆல் அதிகரித்திருந்தது; இதன் எண்ணிக்கை 22,583 ஆகும். அத்தோடு 3,777 துருக்கியப் பெண்கள் வேற்று நாட்டு ஆண்களைத் திருமணம் செய்துள்ளதோடு இது 5.9% அதிகரிப்பாகும். துருக்கியர்களின் வேற்று நாட்டு மணப் பெண்களில் 29% ஆனவர்கள் சிரியப் பெண்மணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியர்களுக்கு அடுத்தபடியாக ஜேர்மனி, அஸர்பய்ஜான், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டவர்கள் துருக்கிய ஆண்களைத் திருமணம் செய்துள்ளனர். துருக்கியப் பெண்களைத் திருமணம் செய்துள்ளவர்களில் 35.4 சதவீதத்துடன் ஜெர்மனியர் முன்னிலை வகிப்பதுடன், அதற்கடுத்தபடியாக சிரியர், அவுஸ்திரேலியர், பிரித்தானியர் மற்றும் அஸர்பய்ஜானியர் உள்ளமையை குறித்த புள்ளிவிபரம் தெளிவுபடுத்துகின்றது.

துருக்கியை பலர் விரும்புவதற்கு முஸ்லிம் உலகில் அது உறுதியான தலைமைத்துவத்துடனும் அரசியல், பொருளாதா, இராணுவ, தொழில்நுட்ப முன்னேற்றங்களில் மிகுந்த வினைத்திறனோடு முன்சென்று கொண்டிருக்கும் நாடாக உள்ளமை குறிப்பிடத்தக்க காரணியாகும்.

தமிழில்: Siaaf

அப்துஸ் ஸத்தார் ஈதியை கௌரவித்த கூகுள்

image
கடந்த பெப்ருவரி 28 (செவ்வாய்க் கிழமை) அன்று உலகப் பிரசித்தி பெற்ற தேடுபொறியான கூகுள் ஒரு தனிநபரை கௌரவிக்கும் விதத்தில் தனது முகப்பை மாற்றியமைத்திருந்தது. அவர் பாகிஸ்தான் நாட்டில் ‘கருணையின் தூதுவர்’ என சிறப்புப் பெயரால் வர்ணிக்கப்படும் அப்துல் ஸத்தார் ஈதி ஆவார். அவருடைய 89வது பிறந்த தினத்தை கௌரவிக்கும் விதமாகவே கூகுள் தனது முகப்புப் பக்கத்தை மாற்றியமைத்திருந்தது.
பாகிஸ்தானில் பிறந்து அங்கேயே வாழும் அப்துஸ் ஸத்தார் ஈதி உலகிலேயே மிகப் பெரும் தன்னார்வத் தொண்டர் சேவையிலான அம்பியூலன்ஸ் வலையமைப்பை நிறுவியவராகக் கணிக்கப்படுகிறார். அது ‘ஈதி பவுண்டேஷன்’ என பாகிஸ்தானில் அழைக்கப்படுகிறது.
1928ம் ஆண்டு இந்திய பிரிவினைக்கு முந்தைய குஜராத்தின் பந்த்வா எனுமிடத்தில் பிறந்த ஈதி அவர்கள் தனது இருபது வயதுகள் தொட்டே பொதுச் சேவைகளில் அர்ப்பணித்துக் கொண்டார். படிப்படியாக வளர்ச்சிபெற்ற அவரது தன்னார்வத் தொண்டு அமைப்பு 2005ம் ஆண்டில் அமெரிக்க கத்ரீனா சூறாவளியின் போது $ 100,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிவாரணங்களை சேகரித்து வழங்கியிருந்தது. சுமார் 1,800 க்கும் மேல் அம்பியூலன்ஸ் வண்டிகளைக் கொண்டிருந்த அவரது சேவையணியானது 1997ம் ஆண்டில் உலகின் மிகப் பெரும் தன்னார்வத் தொண்டு அம்பியூலன்ஸ் சேவையாக கின்னஸில் பதியப்பட்டிருந்தது.
அவர் தனது உரைகளில் பயன்படுத்தும் வாசகங்கள் மனதை உத்வேகமூட்டுபவையாக உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. “மக்கள் இன்னும் மனிதனாக வேண்டியிருக்கிறது”, “எனது அம்பியூலன்ஸ் உன்னை விடவும் நல்ல முஸ்லிம்”, “மனிதத் தன்மையை விட மதம் உயர்ந்ததல்ல” போன்றவை அவரது புகழ்பெற்ற வாசகங்களாகும். “வாழுங்கள்! வாழ்வதற்கு உதவுங்கள்!” என்ற வாசகத்தை சுலோகமாகக் கொண்டு ஈதி பவுண்டேஷன் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. மானுட நேயப் பணிகளில் சாதனை படைத்த அப்துஸ் ஸத்தார் ஈதி கடந்த ஆண்டு கராச்சியில் உள்ள ஒரு சாதாரண அரசாங்க வைத்தியசாலையில் மரணமுற்றார். திடீரென சுகஈனமுற்று வெளிநாட்டு சிகிச்சைகளுக்கான வாய்ப்புக்கள் இருந்த போதும் இவர் அதனை மறுத்து சாதாரண அரசாங்க வைத்தியசாலையையே தேர்ந்தெடுத்தார்.
அவருக்கு சமாதாத்துக்கான நோபல் பரிசுக்கு பல முறை சிபாரிசு செய்யப்பட்டிருந்தும் அது கிடைக்கப்பெறவில்லை. மலாலாவுக்கு அப்பரிசு கொடுக்கப்பட்ட போது மலாலாவை விடவும் இவரே அதற்குத் தகுதியானவர் என குரல்கள் எழுப்பப்பட்டன. அதற்கென 2014 இல் #NobelPrizeForEdhi என ஹெஷ்டேக் கள் உருவாக்கப்பட்டும் குரலெழுப்பபட்டது. அதற்கவர் “நோபல் பரிசு இம்மக்களுக்கு சேவை செய்வதனைப் போல் வேறு எதனையும் தந்துவிடாது.” எனக் கூறிவிட்டார்.
இவர் நினைவாக பாகிஸ்தான் அரசு நாணயக் குற்றியொன்றை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.